திங்கள், 20 மே, 2019

சேகுவேரா


                                               சேகுவேரா 

                            தொகுப்பு : மருத்துவர் .பழ .ஜெகன்பாபு 


 
உலகத்தின் மிகச்சிறந்த போராளி. புரட்சியாளன்  என்று சொன்னால் அது ஒன்றும் மிகைப்படுத்தல் ஆகாது

ஏனெனில் ஒரு புரட்சியாளர் எப்போது உருவாகிறான்:

Ø தனது இனம் , மொழி அல்லது தனது  நாடு ஒடுக்கப்படும் போது அல்லது அடிமைப்படுத்தப் படும் போதும்

Ø  வறிய ஏழைக் குடும்பத்தில் உழன்று  சமூகத்தின் மேல் கோபம் எழும்போது

Ø படித்து வேலை வாய்ப்பு இல்லாமல் அலையும் போது


இந்த  எந்த வரையறையிலும்  சேகுவேரா இணைத்துப்  பார்க்க முடியாது

ஏனெனில் அவள் புரட்சியில் பங்கெடுத்த எந்த நாடும் இவரின் சொந்த நாடு கிடையாது.

 வசதியான குடும்பத்தில் பிறந்து நல்ல கல்வி பெற்று பின் மருத்துவராக பட்டம் பெற்றவர்.

எனினும் முதலாளித்துவ ஏகாதிபத்திய எங்கெல்லாம் தன் குணத்தைக் காட்டுகிறதோ  அங்கெல்லாம் சென்று போரிட்டார்.

“உலகில் எந்தெந்த நாடுகளெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறதோ அவை எல்லாம் என் நாடு” என்று பரந்த மனத்துடன் கூறிய வீரர் இந்த சேகுவேரா

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபப் புரட்சியில்  வெற்றி கண்ட நாயகனாக நின்று, அதன் பின் ஆப்பிரிக்க கண்டத்து  காங்கோவில் போராடி  விட்டு , இறுதியாக பொலிவியாவில் போராடி அங்கே சுட்டுக் கொல்லப்பட்டார்

இதனை மேம்போக்காக படிக்கும்போது புரட்சி , புரட்சி என்று பேசி தெரியும் இயல்பு வாழ்க்கை பற்றி தெரியாத ஒரு இளைஞன் என்று எண்ணத் தோன்றினால் உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. அவர் கியூபப் புரட்சிக்குப் பின் அந்த நாட்டின் தலைமை வங்கிக்கு (ரிசர்வ் பேங்க் போன்றது) தலைவராக இருந்தார். கியூபாவில்  பணத்தாள்கள் அவர் கையொப்பத்துடன் தான் வெளிவந்தது. பின் கூடுதலாக தொழில் அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அப்போது பல்வேறு நாடுகளுக்குச் சென்று கியூபாவின் தொழில் வளர்ச்சிக்கு வழி தேடினார் . பல்வேறு மாநாடுகளில் உரையாற்றினார். ஆனால் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையினால் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தயங்கினர். புரட்சிக்குப் பின் கியூப அரசமைப்பு ஒரு நல்ல நிலை பெற்ற பின் தன் பதவி, குடியுரிமை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு அடுத்து களம் நோக்கி புறப்பட்டார். உலகத் தலைவர்களோடும்  பல பிரதமர்களோடு விமானத்தில் பறந்து உயர்ந்த உணவு உண்டவர். அதை எல்லாம் உதறி தள்ளி  ஒரே நாளில் கடுமையான சூழலில் சரியான உணவு, உறைவிடம் இல்லாத ஆப்பிரிக்க காடுகளில் புரட்சியை முன்னெடுக்க  பயணித்தார்.


சில வாழ்க்கை குறிப்புகள்

“எர்னஸ்ட்டோ குவேரா டி-லா- செர்னா “ என்பது தான் அவர் பெற்றோர் இட்ட பெயர். எர்னஸ்ட்டோ தந்தையின் பெயர். “குவேரா”  குடும்பப் பெயர்

இது “சே” என்பது போராளித் தோழர்களால் சூட்டப்பட்ட புனைப் பெயர் .


 சே பிறந்தது 1928 , ஜூன் 14 குறைமாதக் குழந்தையாக ஒன்பதாவது  மாதத்தில்  பிறந்தார் . அவரின் பெற்றோர் ஸ்பெயின் வம்சாவழி வந்தவர்கள்.
   மூன்றாவது வயது முதலே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டார். அது கடைசி வரை அவரை தொல்லைப்படுத்தியது

 மாணவப் பருவத்தில் மொபெட் வண்டியில் பனிரெண்டு மாகாணங்களை  சுற்றி வந்தார்.

அப்போதும் தொழுநோய் மருத்துவமனைக்கு  சென்று பல நாட்கள் தங்கி தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்தார்

1953இல் மருத்துவப் பட்டம் பெற்றார்

அதன்பின் தொழிற்சங்கங்களில்  இணைந்து போராடினார். தொழிற்சங்கத் தலைவர் ஆவதற்காக  சுரங்க தொழிலாளியாய் பணியாற்றினார்.

ஒவ்வாமை(Allergy ) துறையில் ஆய்வு மாணவராகவும்  பணியாற்றி உள்ளார்.

1954-ல் மெக்சிகோவில் மத்திய மருத்துவமனையில் மருத்துவராக  பணிபுரிந்தார்  

மெக்சிகோவில் உள்ள போதுதான்  பிடலை சந்திக்கிறார். முதல் தாக்குதல் (ஜூலை 26, 1953) தோல்விக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ பின் விடுதலை செய்யப்பட்டவுடன் மெக்ஸிகோ செல்கிறார் .

1956 ஜூன் 4 , மெக்ஸிகோவில் சேவும் பிடலும் தோழர்களும் மெக்ஸிகோ அரசால் கைது செய்யப்படுகின்றனர். பின் நவம்பர் மாதம் வெளியாகி 81 போராளிகளுடன்  கிராண்மா என்ற படகில் கியூபாவை  வந்தடைகின்றனர்.

பின்பு கியூபாவில் புரட்சி படையை செழுமைப்படுத்தி புரட்சிக்கு தயார் செய்தனர்.

 புரட்சிப் படையின் மருத்துவராக இணைந்த  சேகுவாரா பின்  புரட்சிப் படையின் கமாண்டராக” ஒரு பிரிவின் தளபதியாக செயல்பட்டார்

கியூப புரட்சிக்குப்பின் மத்திய வங்கியின்  தலைவராக தொழில் அமைச்சராக பணிபுரிந்தார்.

 பின் மீண்டும் பிற நாடுகளுக்குச் சென்று புரட்சிப் படைகளை உருவாக்கினார்.காங்கோவிலும்  பின் பொலிவியாவிலும்  கொரில்லாப் படைக்கு  தலைமை ஏற்றார் .

1967 ,அக்டோபர் குவேராவின் கொரில்லா படையினரை பொலிவியா மற்றும் அமெரிக்க ராணுவப்படையினர் சுற்றி வளைத்து கடும் சேதம் ஏற்படுத்தினர்.

அக்டோபர் 8, 1967 குவேரா  படுகாயத்துடன் அரசுப் படையால்  பிடிக்கப்படுகிறார். மறுநாள் சேகுவேரா சுட்டுக் கொல்லப்படுகிறார்

அவர் இறந்து சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பின் பொலிவியாவில்  அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து  தோண்டி எடுக்கப்பட்டு,கியூபாவில்  சாண்டாகிளாரா நகரத்தில் சேகுவராவும் அவரது தோழர்களும்  அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டனர்



இத்தனையும் 39 வருடம் 45 நாட்களுக்குள் சேகுவேரா சாதித்தவை. சேவின்  வாழ்க்கையில்  பல பரிணாமங்களை பார்க்கிறோம். இளமை வேகமும் துடிப்பும் கொண்ட இளைஞராக, போர்க்களத்தில் ஆயுதபாணியாக நிற்கும் கொரில்லா வீரனாக ,கியூபாவின்  பொருளாதார நிர்வாகியாக என்று  பல வடிவங்களில்  சேகுவேரா பரிணமித்துள்ளார்.  

கியூபாவை விட்டுக் கடைசியாக  சேகுவரா வெளியேறும் போது தன் நண்பருக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார். அதில் “எனது வீடு என்பது என் இரு கால்கள்  என்று மீண்டும் ஆகியிருக்கிறது என் கனவுகளுக்கு எல்லையோ  முடிவோ இல்லை அல்லது துப்பாக்கி குண்டுகள் வேறொன்றை முடிவு செய்யும்வரை” என குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான் அவரது கனவுகளுக்கு  எல்லைகளே  இல்லை. சமத்துவமும் மானிட விடுதலையுமே  அவரின்  வேட்கையாக  இருந்தது. இப்படி எல்லைகளைக் கடந்து சிந்தித்த போராளி வேறு யாரும் உலக வரலாற்றில் இல்லை எனலாம்.

அதனாலயே இன்றும் புரட்சி என்ற சொல் ஒலிக்கப்படும் போது “சே” நினைவுக்கு வருகிறார். ஒருவர் மறைந்து காலங்கள் ஓட ஓட அவர்களின் நினைவுகள் சமுதாயத்தில்  மங்கிவிடும் . ஆனால் “சே”  எதிலும் வித்தியாசமானவர். மறைந்து காலங்கள் அதிகமாக உருண்டோடும் போது தான் அவர்  உலகில் அதிகம் அறியப்பட்டுள்ளார்


சில தகவல்கள்

அவர் மாணவப் பருவத்தில் பயணம் மேற்கொண்டபோது தொழுநோயாளிகளுடன்  ஒன்றாகத் தங்கி அவர்களுடனே உணவு உட்கொண்டு கட்டியணைத்து அவர்கள்
 வாழ்க்கையே  மாற்றியதோடு மட்டுமின்றி அங்குள்ள மருத்துவர்களும் அவ்வாறே பழகுமாறு செய்தார் .

கியூப புரட்சியின்போது ராணுவ முகாம் தாக்குதல் சமயங்களில் எதிரி பாடிஸ்டா படை வீரர்கள் காயமுற்று இருந்தாலும் ,மருத்துவராக அவர்களுக்கு சிகிச்சை அளித்த மனிதநேயக்காரர் சேகுவேரா .

பிடலை முதல் முறையாக மெக்ஸிகோவில் சந்தித்த போது அன்று இரவெல்லாம் கியூபாவைப் பற்றி உரையாடினார். சே சொல்கிறார்  “இரவு முழுக்க பிடல் பேசினார் பொழுது விடியும்போது நான் அவரோடு புரட்சியில் பங்கெடுப்பது  என முடிவு செய்து விட்டேன்” என்கிறார் ஒரே நாளில் மருத்துவப் பணியை கை விட்டு புரட்சி படையில் இணைகிறார்

சேகுவேராவும் பிடலும் அமைச்சர்கள் ஆன பின்பும் பல நாட்கள் கரும்பு தோட்டத்தில் கரும்புகளை வெட்டினர்.


கியூபா  புரட்சி முடிந்து அமெரிக்க அரசு அமைக்கப்பட்ட பின் அமெரிக்க ஏவிவிட்ட கூலிப்படை பன்றி வளைகுடா பகுதியில்  தாக்குதல் நடத்தியபோது சேகுவரா தானே களத்தில் நின்று (தொழில் அமைச்சர் ஆன பின்பும்) போரிட்டு வெற்றி பெற்றார்


சே புதைக்கப்படவில்லை
புரட்சியாளராக விதைக்கப்பட்டிருக்கிறார் !

பிடல் காஸ்ட்ரோ

                                      பிடல் காஸ்ட்ரோ

                                தொகுப்பு:மருத்துவர்.பழ.ஜெகன்பாபு

 பிடல் காஸ்ட்ரோ –கியூபாவின் நாயகர் .இருபதாம் நூற்றாண்டு கண்டிட்ட  இணையற்ற உலக புரட்சியாளர்.
ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு  தம் வாழ்நாள் முழுவதும்  சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் .  

            அமெரிக்காவின் ஒரு மிகச் சிறிய மாநிலத்தின் அளவு கூட இல்லாத நாடு கியூபா . அந்த நாட்டிலிருந்து சர்வதேச வல்லாதிக்க நாடான அமெரிக்காவுக்கு ஒரு சவால் விட்டவர் தான்  பிடல் காஸ்ட்ரோ .

நிலப் பண்ணையாரின் மகனாக பிறந்தவர்.ஆனால்  சிறு விவசாயிகளுக்கும் விவசாய கூலிகளுக்குமாய் போராடியவர் . கம்யூனிச எதிர்ப்புணர்வு கொண்ட ஆர்தோடக்ஸ் கட்சியில் இணைந்து பின் கம்யூனிஸ்டாக மாறி கியூபாவை சோசலிச ,கம்யூனிஸ்ட் நாடாக அறிவித்தவர். இப்படி பல சுவரஸ்யமான தகவல்களை கொண்டது பிடலின் வாழ்க்கை .

1926 இல் பிறந்தவர் .  26 வயதில் 1952-இல்  முதல் புரட்சி தாக்குதலை  நடத்தினார்.மரணிக்கும் வரை அதே போன்று மன உறுதியும் ,  போராட்ட குணமும் கொண்டவராக திகழ்ந்தார்  

2002 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் புஷ் , பிரிட்டன் ,ஆஸ்திரேலியா நாடுகளின் துணையோடு ஈராக் மீது தாக்குதல் நடத்தினார் .

 அப்போது புஷ் ஈரான் , சிரியா , வடகொரியா , கியூபா ஆகிய நாடுகளையும் குறிப்பிட்டு ரவுடி நாடுகள் எனக்  குறிப்பிட்டு அவற்றையும் தாக்குவோம் என்றார்  உலக நாடுகள் பலவும் கண்டித்தன.

சில நாட்கள் கழித்து பள்ளிகளில் மாணவர்களிடையே பிடல் பேசும்போது “இப்போதும் புஷ் ஆண்டவன் இட்ட கட்டளை என்கிறார் . ஆண்டவனிடம் நெருக்கமாக உள்ள போப் ஆண்டவரோ  இது சாத்தானின் வேலை என்கிறார். புஷ்க்கு  ஒரு கடவுள். போப்புக்கு  இன்னொரு கடவுளா ? இதை அவர்களே தீர்மானிக்கட்டும்.  பைபிளை தொட்டு சத்தியம் செய்து பதவியேற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தான் ஜப்பானில் குண்டு  போட்டார். வியட்நாமில் குண்டு மழை பொழிந்தார். ஈராக்கில் ஜெபமா  பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? என்று  அமெரிக்காவின் முகமுடியை உலகுக்குக் கிழித்து  காட்டினார்.


பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை குறிப்புகள் சில:

பிறப்பு  : ஆகஸ்ட் 13 , 1926

இயற்பெயர் : பிடல் காஸ்ட்ரோ ரூஸ்

அவரது குடும்பம் செல்வ செழிப்பான குடும்பமாக இருந்தது. அவரது தாத்தா ஒரு சாதாரண வாகன் ஒட்டியாக இருந்தாலும், அவர் தந்தை கடுமையாக உழைத்து ஏராளமான நிலங்களை பெற்றிருந்தார்.

அவர் சிறப்பான  ஆரம்ப கல்வியை கத்தோலிக்கப் பள்ளிகளில்  பயின்றார்

ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே அரசியல் ஊழலுக்கு எதிரான மாணவர் குழுவிலும்  பின்பு மரபு கட்சி (ஆர்த்தடாக்ஸ் பார்ட்டி ) என்று அழைக்கப்பட்ட கியூப மக்கள் கட்சியில் இணைந்தார்

மார்ச் 10, 1952 இல் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி  ஜெனரல் பாடிஸ்டா இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார்.  இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஆயுதம் ஏந்திய புரட்சியை  நடத்த புரட்சிகர அமைப்பை உருவாக்கினார்.

ஜூன் 26,1953 இல் தனது  26வது வயதில் காஸ்ட்ரோ 160 ஆயுதமேந்திய சாண்டியாகோவிலுள்ள  இளம் வீரர்களுடன் மொன்கடா  ராணுவக் காவல்  முகாம் மீது தாக்குதல் தொடுத்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது அதில் அவரும்  மேலும் 20க்கும் மேற்பட்ட போராளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.

மொன்கடா தாக்குதலின் போதும்  அதை ஒட்டியும் 60 போராளிகளுக்கு மேல் பாடிஸ்டா ராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

    சில வருடங்களுக்கு முன்பு தான் தனது சட்டப் படிப்பை முடித்திருந்த காஸ்ட்ரோ  பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது மறுப்பறிக்கையை  தானே தயார் செய்து கொண்டார். நீதிமன்றத்தை அவர் கியூபா  புரட்சிக்கு  ஆதரவாக வாதிடும் களமாக மாற்றி விட்டார். அந்த அறிக்கை பின்பு  “வரலாறு என்னை விடுவிக்கும்” என்று பல்லாயிரகிக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டது

    அவருக்கும் அவர்  தோழர்களுக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகரித்து வந்த மக்கள் பிரச்சாரத்தின் காரணமாக 22 மாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டனர்.

1955 இல்  மே மாதம் விடுதலை செய்யப்பட்ட பிடல், ஜூலை மாதம் மெக்சிகோ பயணமானார். அங்கிருந்தபடியே கியூபா  புரட்சிக்கான  புரட்சிகர படையை துவங்கினார். அங்குதான் அவர் “சே” குவேராவை சந்தித்தார். அங்கே ஒரு கொரில்லா படையை உருவாக்கினார்

1956 , டிசம்பர் 26 அன்று சே குவேராவுடன்  தனது சகோதரர்கள் உள்ளிட்ட 81 சக போராளிகளுடன் “கிராண்மா”என்ற  கப்பல் மூலம் கியூபக் கடற்கரையை அடைந்தார். அடுத்த 2  ஆண்டுகளில் காஸ்ட்ரோ ஜூலை 26 இயக்கத்தின் மத்திய தலைவராக  தொடர்ந்ததுடன் புரட்சி இராணுவத்தையும் வழி நடத்தினார்.

பின் பல்வேறு இன்னல்களுக்கிடையே புரட்சிப் படையை புனரமைத்து   தனது போராட்டத்தை சியரா மேஸ்ட்ரா மலைகளிலிருந்து கியூபா தீவு முழுவதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தினார்

ஜனவரி 1, 1959 அன்று கியூபாவை விட்டு சர்வதிகாரி பாடிஸ்டா ஓடிவிட்டார். காஸ்ட்ரோவின் அறைகூவலை  ஏற்று புரட்சிக்கு ஆதரவாக  பொது வேலை நிறுத்தத்தை மக்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

ஜனவரி 8 1959 அன்று காஸ்ட்ரோ வெற்றிகரமாக கியூபா ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஹவானாவில் நுழைந்தார். பிப்ரவரி 13,  1959 அன்று பிரதம மந்திரியாக அவர் பொறுப்பேற்றார். டிசம்பர்   1979 வரை அந்த பதவியை  வகித்தார். பின் தேசிய  சபையின் ஜனாதிபதியாகவும் , மந்திரி சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். தானாக தன் பதவியை விட்டு அவர் விலகும் வரை அந்த நாட்டின் அதிபராக நீடித்தார்


 பிடல் - சில ருசிகர தகவல்கள்

  
தாம் பைனஸ்  தீவில் சிறைப்பட்டிருந்த போது தனது மனைவி மிர்தா  கணக்கராகப் பணியாற்றினார் என்பதை அறிந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். தன் குழந்தையை காப்பாற்றத்தான் அரசு வேலையில்  சேர்ந்ததாக மனைவியும் அவர் கூறியதையும் அவர் ஏற்கவில்லை. பின்னர் மனைவி வேறொருவரை மணந்து வெளிநாடு சென்று  விட்ட போதிலும் பிடல்  மறுமணம் செய்யவில்லை

   ஒருமுறை பிடலின் மகனுக்கு உடல் நலிவுற்றது. கண்டிப்பாக அறுவை சிகிச்சை தேவை என்ற நிலை வந்தது. மகனை கண்ட பிடல் 5 பிசோவை (கியூப  நாணயம்) ஒருவரிடம் கடன் வாங்கி கொடுத்து விட்டு, ஒரு நட்பு டாக்டரிடம் சிகிச்சை பெறச்சொல்லி விட்டுப் போய்விட்டார் அப்போது அவர் பையில் நூறு பிசோ  இருந்தது.  இது துப்பாக்கிகள்  வாங்க வந்த நன்கொடை ஆதலால் மகனின் மருந்துக்காக செலவிட முடியாது  மறுத்து விட முடியாது என கூறினாராம்

   தான் ஒரு பண்ணையாரின் மகனாக இருந்தும் விவசாயிகளின் துயர வாழ்க்கையை எண்ணி மிகவும் வருந்துவார். அவர் கல்லூரிப் படிப்பின்போது விடுமுறையில் வந்திருந்த தருணத்தில், சிறுநில சொந்தக்காரர்களையும் , விவசாயிகளையும்  திரட்டி யுனைடெட் ஃப்ரூட் சர்க்கரை  ஆலை (அமெரிக்க நிறுவனம்) க்கு எதிராக ஒரு போராட்டத்தை தொடங்கினார். அப்போது தன் தந்தையாரின் கரும்புப் பண்ணையில் முதலில் தீ வைக்குமாறு  யோசனை கூறினார்.  கரும்பு வயல்கள் பற்றி எரிந்தன.  பிடல் அப்போது அகப்படாமல் தப்பி விட்டார். போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் கியூபப் புரட்சி வெற்றி பெற்று நிலச் சீர்திருத்தச்சட்டம் அறிவிக்கப்பட்டபோது அரசு எடுத்துக்கொள்ளும் பண்ணை நிலங்களுக்கு  இழப்பீட்டு தொகை தர ஒப்புக் கொள்ளப்பட்டது. அதில் ஒரே ஒரு விதிவிலக்கை  அறிவித்தார் தன் தந்தைக்கு சொந்தமாயிருந்த 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்திற்கு மட்டும் இழப்பீடு தொகை கிடையாது என அறிவித்து அந்த நிலத்தை பிடலும், சேகுவாராவும் நேரில் சென்று விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்கினர்

  
    புரட்சி வெற்றி பெற்ற போது தன்னை அதிபராக அறிவித்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த தேசபக்தர் உர்சியா  என்பவரை ( இவர்தான் மொன்கடா  இராணுவ முகாம் தாக்குதல் வழக்கில்  நீதிபதியாக இருந்தவர்) அதிபராக அறிவித்தார் ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர், பொருளாதார நிபுணர்கள் இருவர், தனது ஆதரவாளர் இருவர்  ஆகியோரை கொண்ட மந்திரி சபை அறிவித்தார்


  
     பிடலுக்கு சுருட்டு பிடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் அரை கட்டு சுருட்டு பிடித்து வந்த அவர் தம்  மக்களுக்கு முன் மாதிரியாக திகழ அந்த பழக்கத்தை அடியோடு கை விட்டார்

   
    பிடல் ஒரு புரட்சியாளர் மட்டுமில்லை. நல்ல இலக்கிய ரசனை கொண்டவர்.மேலும் அறிவுத்தேடல்  அதிகம் உண்டு. அறிவியல் , மருத்துவம் என எந்தத் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கிடைத்தாலும் உடனே அதை முழுமையாக படித்து விடுவார்.பிடல்  ஒரு மிகச்சிறந்த பேச்சாளர். எங்கே, எப்போது பேசினாலும், தன் திறமையால் அனைவரையும் கவர்ந்து விடுவார். கியூபாவில் அவர் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்றால் அவரை  ரசிக்க மக்கள் ஆங்காங்கே கூடிவிடுவர். நாடே ஸ்தம்பிக்கும்.

      உலகில் அதிக கொலை முயற்சிகளுக்கு தப்பியவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ இவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் மட்டும் 638. உண்ணும் உணவில், குடிக்கும் பானத்தில், பிடிக்கும் சுருட்டில், என பலவகை கொலை முயற்சிகளையும் முறியடித்து உயிரோடு உலா வந்தவர் இந்த புரட்சியாளர்.

கியூபா – சில குறிப்புகள்




                              கியூபா – சில குறிப்புகள்                               



தலைநகர் : ஹவானா
மக்கள் தொகை : ஒரு கோடியே முப்பது இலட்சம்
மொழி : ஸ்பானிஷ் , கம்யூனிச நாடு
முக்கிய தொழில் : விவசாயம்
பிரதான பயிர்கள் : கரும்பு ,புகையிலை

உலகின் அதிக  சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு கியூபா எனவே உலகின் “சர்க்கரைக் கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது

வரலாறு 

ஸ்பானிய காலனிய நாடாக இருந்து பின் விடுதலை பெற்று, அமெரிக்க ஆதரவு அதிபர்கள் ஆட்சி புரிந்தனர். 1959- இல் கியூபாவில்  பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஆயுதமேந்திய மக்கள் புரட்சி ஏற்பட்டு சர்வாதிகாரி பாடிஸ்டா ஆட்சி  நீக்கப்பட்டு கம்யூனிச நாடாக அறிவிக்கப்பட்டது.


கல்வி

கியூபா  புரட்சி முடியும் போது பாதிக்கும் பாதி எழுத்தறிவில்லாதவர்களாய்   இருந்தனர்.  எனவே எழுத்தறிவிப்பு  படை ஒன்று உருவாக்கப்பட்டு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சிறியவர் முதல் பெரியவர் வரை கல்வி கற்பிக்கப்பட்டது இதன் மூலமாக ஒன்றரை வருடங்களில் எழுத்தறிவில்லாதவர்  எண்ணிக்கை 4% குறைக்கப்பட்டது

  

கல்வி முழுவதும் அரசிடம் உள்ளது. தனியாருக்கு இடமில்லை. தொழிற்கல்வி வரை அனைத்தும் இலவசம்.
 
 ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய கல்வி

 
ஆரம்பக் கல்வி முதல் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பிலிருந்து ஒரு அயல் மொழி ஆங்கிலம், பிரெஞ்சு ,ருஷ்ய மொழி கற்பிக்கப்படுகிறது

 
 கல்வியின் தரம் மிக சிறப்பாக பேணப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் வகுப்பறையில் தொலைக்காட்சி ,  கணினி  பொருத்தப்பட்டுள்ளது

 
இலத்தின் அமெரிக்க நாடுகளில் மொழியறிவில் கியூபா மாணவர்களே சிறந்து விளங்குவதாக யுனஸ்கோ  அறிவித்துள்ளது

 
மாணவர்கள் மலையில் இருந்தாலும் அவர்களுக்கென்று  பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பத்துக்கும்  குறைவான மாணவர்களோடு மட்டும் 2,000 பள்ளிகள் உள்ளன

 
சராசரியாக 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். உலகிலேயே கியூபாவில் இந்த சராசரி இங்கு தான் குறைவு .
              
 

மருத்துவம்

 
மருத்துவக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.

 
கியூபா மருத்துவ மாணவர்கள்  மட்டுமன்றி வளரும் நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்களுக்கும் கியூபா இலவச மருத்துவ கல்வி சேவை அளிக்கிறது.

 
170 பேருக்கு ஒரு டாக்டர்  உள்ளார். அமெரிக்காவில் 188 :1  மக்கள் தொகையை  கொண்டு சராசரி கணக்கிட்டால்  உலகிலேயே கியூபா  தான் முதலிடம்.

 
நாட்டில் உள்ள மருத்துவமனைகள் ஒளி-ஒலி துணைக்கொண்டு இணைக்கப்படுகிறது

 
மருத்துவக்கல்வி சேவையாக வழங்கப்படுவதால் கியூபா மருத்துவர்கள் 25 ஆயிரம் பேர் ஆப்பிரிக்கா,வியட்நாம்  போன்ற நாடுகளில் சேவையில் ஈடுபட்டுள்ளனர்

 
கால்பந்து வீரர் மரடோனா கியூபாவில் தான்  சிகிச்சை பெற்றார்

 

பிற சாதனைகள்

 
 ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு அரசே தருகிறது

 
 பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்ப  பணியாளர்களில் 64% பேர் பெண்கள்.

 
விளையாட்டிலும் கியூபா வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர்.  ஒன்றே கால் கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கியூபாவில் 10 இலட்சம் மக்களுக்கு  ஒரு தங்கப் பதக்கம் வீதம் வெல்கிறது. (இந்தியாவில் 100 கோடிக்கு ஒரு தங்கம்)

 
அமெரிக்கா கியூபா மீது பொருளாதார தடை விதித்துள்ளது.எனவே கடுமையான நெருக்கடியிலும் கியூபா சாதித்துக் கொண்டிருக்கிறது . உலக வங்கியிடம் கடன் வாங்காமல் இவற்றை  சாதித்துக் கொண்டிருக்கிறது

 
லாட்டரி குதிரைப்பந்தயம் போன்ற அதிர்ஷ்டத்தை நம்பும் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது