புதன், 25 ஜூலை, 2012

விடுதலையும் நானும் !




 விடுதலைக்கும் எனக்குமான உறவை இப்போதும் எண்ணி பார்க்கிறேன் . என் தந்தை சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை பழனியப்பன் அவர்கள் தருமபுரி மாவட்டம் பெரியார் பெருந்தொண்டர்களின் பாடிவீடாய் திகழ்ந்த மொரப்பூர் ஒன்றியத்தில் கடத்தூரில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் .இவரின் சகோதரர்கள் அனைவரும் தீவிரமான காங்கிரஸ் தொண்டர்கள் .என் தந்தையின் இயல்பான முற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப இயக்க தோழர்களின் நட்பும் கிடைக்க இயக்கத்தில் இணைந்தார் .பிறகு புரட்சிகர திருமணம் செய்து கொண்டு  என் தாயுடன் ஊற்றங்கரை குடிபெயர்ந்த போது என் வீட்டிற்குள் எனக்கு முன்பே விடுதலை குடிபுகுந்ததால் ஒரு வகையில் விடுதலை என் மூத்த சகோதரன் !
                   இரண்டு செய்தி தாள்கள் என் தந்தை வாங்குவார் ஒன்று விடுதலை மற்றொன்று தினகரன் (கேபிகே நடத்திய தினகரன் ). ஊற்றங்கரையில் சிறிய அளவில் மருந்து வணிகம் நடத்தி வந்த எங்களுக்கு  காலையில் விடுதலை வீட்டில்  போடுவார்கள் தினகரனை கடையில் போடுவார்கள் விடுதலை வீட்டில் இருந்து கடை திறக்க என் தந்தை போகும்போது கடைக்கு எடுத்து செல்வார் .விடுதலையும் கடையிலேயே போடலாமே இதை மட்டும் வீட்டில் இருந்து கடைக்கு ஏன் எடுத்து செல்ல வேண்டும் என்று என்தந்தையிடம் கேட்ட போது அம்மா படிக்க வேண்டாமா ?நீ படிக்க வேண்டாமா ?என்பார் அந்த சின்ன வயதில் நாம் படிக்க கூட பேப்பர் அப்பா வாங்குகிறாரே  என்கிற பெருமிதத்தில் காலையில் பாடபுத்தகங்கள் படித்து முடித்த உடன் என் தந்தை கடைக்கு போவதற்குள் விடுதலையை அவசரமாய் புரட்டுவேன் ஒன்றும் புரியாது ஒரு வகையில் விடுதலை என் பாட புத்தகம் !
                  பெரும்பான்மையான உயர் நிலைக் கல்வி ,மேல்நிலை கல்வி ,கல்லூரி கல்வி விடுதிகளில் கழிந்தது .விடுமுறைகளில் வீடு திரும்பினால் அடுக்கி வைக்கப்பட்ட பழைய விடுதலை தான் இயக்க தொடர்புக்கான உறவு சங்கிலியும் ,பொழுது போகிற்க்கான  வாசிப்பு தாளும் படிக்கிற போது எழுகிற சந்தேகம் இரவில் படுக்கும் போது என் தந்தையுடன் விவாதமாய் மாறும் .ஒரு வகையில் விடுதலை என்னை பட்டை தீட்டிய நண்பன் !
                     கருநாடக மாநிலம் மங்களூரில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்த போது என் தந்தை மறைந்தார் .அது வரை இயக்க செயல்பாட்டில் நானோ ,எனது சகோதரரோ இருந்ததில்லை .என் தந்தையின் இரங்கல் கூட்டத்தில் தலைமை கழக பொறுப்பாளர்கள் அன்றைய விடுதலையில் தமிழர் தலைவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையினை வாசித்தார்கள் .விடுதலை அன்றைக்கு எங்கள் துயரங்களுக்கு தோளாய் இருந்தது .
                        என் தந்தையின் படத் திறப்பு தமிழர் தலைவர் கலந்து கொண்டு வீர வணக்க உரையாற்றினார் .இறுதியாக எனது நன்றி உரை உரை.அதை நன்றி உரை என்பதை விட இந்த இயக்கத்திற்கு  தமிழர் தலைவர் முன்னிலையில்
எங்களின் உறுதி மொழியாக என் தந்தை பணிகளை தொடர்ந்து நாங்கள் செய்வோம் என்று உரையாற்றினேன் .இது யாரும் எதிர்பாராதது .தொடர்ந்து என் தந்தையின் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையை விடுதலை வெளியிட்டதுடன் நான் ஆற்றிய நன்றி உரையையும் விடுதலை வெளியிட்டது .ஒரு வகையில் விடுதலை எனது தூண்டுகோல்!
                         
மெல்ல இயக்க செயல்பாட்டில் வந்து நகர தலைவர் ,இளைஞ்சரணி ,மாவட்ட துணை செயலாளர் ,என பல பொறுப்புக்கள் அறிவிக்க பட்ட பின்னர் மிக குறைந்த வயதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலராக அறிவிக்க பட்டேன்  .கழகத்தின் சார்பில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்க திட்டமிடப் பட்டு மாவட்ட கழக தோழர்களுக்கு நான் எழுதிய ''தங்கம் தர  தங்கமான  நேரம் ''என்னும் கடிதத்தை விடுதலையில் எடுத்து போட்டு மின்சாரம் எழுதிய கட்டுரை இன்றைக்கும் எனக்கு பூரிப்பும் பெருமிதமும் கொள்ள செய்யும் நிகழ்வாகும் .
               ஊற்றங்கரை காவலர் குடி இருப்பில் கரையான்புற்றுக்கு கோவில் கட்ட எடுத்த முயற்சிகளை விடுதலை மூலமாக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தடுத்தது ,நெடுஞ்சாலை துறை பலகையில் ஓம் குறியீடை நீக்க செய்தது என பல முயற்சிகளுக்கு விடுதலை என்னோடு இருந்தது விடுதலை ஒரு வகையில் என் ஆயுதம் !
           இன்றைக்கு விடுதலை அதிகம் சந்தா சேர்த்த மாவட்டத்தில் ''விடுதலை வேர்கள் ''என்கிற பாராட்டுடன் மேடையில் நிற்கிறேன் .நண்பர்களுடன் விடுதலை வாசகர் வட்டம் ஆரம்பித்தோம் இன்றைக்கு தமிழர் தலைவரே ரோல் மாடல் வாசகர் வட்டம் என்று சொல்லும் வண்ணம் செயலாற்றி வருகிறது .அந்த வாசகர் வட்டத்திற்கும் செயலராக நான் இருக்கிறேன் .எனது பிறப்பு முதல் என் தந்தை மறைவு,எனது திருமணம் ,என் பிள்ளைகள் பிறப்பு தொழில் ,இயக்க பொறுப்பு அத்தனையும் விடுதலை பதிவு செய்து உள்ளது . சரி விடுதலைக்கும் எனக்கும் என்ன உறவு ? என் உடலுக்கும் மூச்சுக்கும் என்ன உறவோ அந்த உறவு தான்

புதன், 21 மார்ச், 2012

பெண்ணை பெற்றெடுத்த அப்பாக்கள் !

அழகே !

எத்தனை பேர் வெறுத்தாலும்

அப்பாக்கள் மகளை

வெறுப்பதில்லை

அப்பாவுக்கு மகன் சண்டைச்

சேவல் !

ஆளாகிவிட்டால்

                                                                                      அவன் தோழன் ! 




ஆனால் மகளே ....நீ  எனக்கு

எப்போதும் இனிக்கும் வெல்லம்!

அதனால் நீ  அப்பா  செல்லம்


உள இயல் ரகசியம் ஒன்று

ஆண் குழந்தைகள்

அம்மா தோளை விடாத

குரங்கு குட்டிகள் !

பெண் குழந்தைகளோ

அப்பா முகம் விரைவில் அறிந்து

அனந்த மின்னலோடு

அம்மா மடியிலிருந்து

அப்பா தோளுக்குத் தாவும்

அணில் பிள்ளைகள் !

(அடியாரின் கவிதை தொகுப்பில் இருந்து )

சிதிலமாய் சித்தன்ன வாசல்

அண்மையில் எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவரின் மணவிழாவிற்காக அறந்தாங்கி சென்றேன் .பயண ஏற்பாடுகள் ,எங்கே தங்க வேண்டும் ? போகிற வழியில் என்ன என்ன பார்க்கலாம் என்பதையெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு விட்டார் எனது அன்பு சகோதரர் மருத்துவர் பழ .ஜெகன் பாபு .அவரது புதிய மகிழ் உந்தில் சுகமான இலவச பயணம் என்பதால் நானும் எனது துணைவியும் அவரோடு பயணமானோம் .ஆனால் நான் எதிர் பார்க்கவே இல்லை இந்த பயணம் பல செய்திகளை கற்று தந்தது .இந்த பயணத்திற்கு இடையில் புதுக்கோட்டையில்  திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு அளிக்க கோரி நடை பெற்ற ஆர்பாட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம் .அப்புறம் தொட்டியம் பகுதியில் விற்கப்பட்டு வரும் வாத்துக் கறி...இது குறித்து எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன் .இப்போது சித்தன்ன வாசல் பற்றி ...............

                சித்தன்ன வாசல் செல்லும் வரைக்கும் அதை பற்றி பெரிய எண்ணம் எதுவும் எனக்கு இல்லை .ஆனால் அதை பார்த்த பின்பு தெரிகிறது  இந்து மதம் ஆடிய கோர தாண்டவத்தின் உச்சத்தின் எச்சமாய் காலம் கடந்து சிதிலம் அடைந்து இருக்கிறது ஒரு உன்னத கலை படைப்பு !


முதலில் வரலாற்றை பார்போம் !சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட நாட்டில் தோன்றிய சமண நெறி தமிழகத்தில் காலுன்றிய போது
சைவ வைணவ அரசன்மார்களால் கழுவேற்றப்பட்டனர். இந் நிலையில் சமண நெறி காக்கவும்,தங்களின் உயிரை பாது காத்துக் கொள்ளவும் சமணர்கள் காடுகளிலும் ,மலைகளிலும் பல ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்தனர் ,அவ்வாறு வாழும் போது தாங்கள் வழிபட சமண கோவில்களை மறைவாக உருவாக்கினர் .அப்படி ஒன்றாய் அமைக்கப்பட்டது தான் சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் !

புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழித்தடத்தில் 15 கிமீ தூரம் சென்றதும் உயரமான ஒரு குன்று  இதுதான் சித்தன்னவாசல்.ஒரு காலத்தில்  சமண மத மையமாகத் திகழ்ந்த  சித்தன்னவாசல் இன்று லவ்வர்ஸ் ஸ்பாட் ஆகிவிட்டது,இதில் ஒரு பூங்கா வேறு.அந்த மலை குன்றை ,ஓவியத்தை பார்த்து வெறுத்து போன எனக்கு ஒரே ஆறுதல் தொல்பொருள் இலாகா துறை சார்ந்த ஊழியர் குப்புசாமி என்று அவர் பெயர் .வரலாறு படித்தவர் .உண்மையில் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களுக்கு ஓவியத்தை விளக்கினார் அவர் சொல்லாவிட்டால் எத்தனை பேருக்கு அதன் சிறப்பு புரிந்திருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி ? உண்மையில் இப்படி பட்ட அரசு ஊழியரை காண்பதுஅரிது தான்.



முதலில் குகை ஓவியங்கள் இருக்கும் குன்றை நோக்கி நடந்தோம் குடைவரை அடைந்தவுடன் எதிரில் தோன்றிய தூண்கள் சற்று நெருடலாக இருந்தன. இவை மிகவும் சமீபத்தில் கட்டியவை. தூண்களின் முகப்பில் நாட்டியக் கணிகையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இருப்பினும் இந்த கன்னியரின் ஓவியங்கள் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், நாட்டியக் கச்சையணிந்து பலவித அணிகலன்களையும் அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவ்விரு கன்னியரும் இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.


சித்தன்ன வாசல் ஓவியங்களில் தலைசிறந்து நிற்பது தாமரைப் பொய்கையின் ஓவியமாகும். குடைவரைக் கோயிலின் முகமண்டபத்து விதானத்தில் இவ்வோவியம் காணப்படுகின்றது. இவ்வோவியத்தில் பல்வேறு உயிர்களின் உணர்ச்சிகளையும், ஆரவாரத்திற்கிடையே அமைதியாய் அடங்கி நிற்கும் சமணத் துறவிகளின் உணர்ச்சிகளையும் அற்புதமாக ஓவியக் கலைஞன் வண்ணங்களைக் கொண்டு வடித்துக் காட்டியுள்ளான். இவ்வோவியத்திலுள்ள நீர் நிறைந்த தாமரைத் தடாகம் ஒன்றில் செந்தாமரையும் வெண்டாமரையும் பசுமையான இலைகளுக் கிடையே பூத்துக் குலுங்குகின்றன. இதில் முரட்டுக் குணங்கொண்ட எருமைகளும் பேராற்றல் கொண்ட யானைகளும் இறங்கி, தமது வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. களிறுகள் களிப்புடன் தாமரை மலர்களைத் தண்டுடன் பற்றி இழுக்கின்றன. தாமரைப் பொய்கையில் கூடி வாழும் அன்னப் பறவைகள் சிறகை விரித்து, தமது குஞ்சுகளுடன் பரிதவித்து ஒலியெழுப்புகின்றன. இப்பறவைகளின் அச்சத்தை அவற்றின் இமை விரிந்து விழிகள் பிதுங்கி நிற்கும் கண்கள் புலப்படுத்துகின்றன. நீரில் வாழும் மீன்கள் விலங்குகளின் காலடியில் பட்டு அழிந்து போகாமல் இருக்க அஞ்சித் துள்ளுகின்றன. புறவுலக ஆரவாரங்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றைப் பொருட்படுத்தாமல் அமைதியாய்த் தாமரைக் குளத்தில் மூன்று துறவியர் அறிவனுக்குப் படைப்பதற்குத் தாமரை மலர்களைப் பறிக்க இறங்கியுள்ளனர். அரையில் கோவணம் அணிந்த ஒரு துறவியின் தோளில் அல்லியும் தாமரையும் தண்டுடன் காணப்படுகின்றன. மற்றொரு துறவி இடக்கரத்தில் மலர்க் கூடையை வைத்துக் கொண்டு வலக்கரத்தால் தாமரை மலரைத் தண்டோடு பற்றி இழுக்கின்றார். மூன்றாவது துறவி தாமரை மலரைத் தாங்கிக் கொண்டு மற்றொரு கரத்தில் முத்திரை காட்டுகின்றார். மொத்தத்தில் இயற்கையின் நாடகத்தை நன்கு உணர்ந்த ஓர் ஓவியன் அவற்றைக் காண்பவர் கண்கள் மனத்தை விட்டு அகலாத முறையில் ஓவியமாக வடித்துக் காட்டியுள்ளான் என்றே சொல்ல வேண்டும்


இதை எல்லாம் ரசித்து விட்டு சமணர் படுக்கை காண சென்றேன் உயரமான மலையில் ஏறுவதற்குள் போதும் என்றாகி விட்டது கொளுத்து வெயிலில் என் வயிற்றேரிச்சலை அதிகபடுதினார்கள் காதல் ஜோடிகள் !வியர்க்க முச்சு வாங்க நாங்கள் சென்றிந்த பொழுதுமேலே சமணர் படுக்கை அருகில் மூன்று ஜோடிகள் ஜாலியாக  இருந்தனர்.வாழ்க தொல்பொருள் துறை .!சமணர் படுக்கைக்கு சென்று பார்த்ததும் ஏன் கம்பிவேலி போட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது, சமணர் படுக்கையை காதலர்கள் தங்கள் வேலைகளை செய்யும் இடமாக மாற்றியிருந்தனர் .ஒரு புறம் இந்து மத வெறியர்கள் இந்த சமண சின்னத்தை அழிக்க முயசிக்கின்றனர் ,மற்றொரு புறம் கல் குவாரிகள் ,இன்னொருபுறம் அரசின் அலட்சியம் மொத்தத்தில் ஒரு வரலாறு அழிந்து கொண்டு வருகிறது .முற்றாய் அழிந்து போகுவதற்கு முன் வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்து விட்டு வாருங்கள் !

செவ்வாய், 6 மார்ச், 2012

நான் சொல்ல போவது நன்றி அல்ல !

மார்ச் 6 !    எனது பிறந்த நாள் ,என்னை பொறுத்தவரை வழக்கம் போல் இதுவும்
 மற்றொருநாள் தான், ஆனால் குடும்பத்தினர், நண்பர்கள்(முகநூல்நண்பர்களும் சேர்த்தே சொல்கிறேன் ),தோழர்கள் ,ஊழியர்கள் , நலம் விரும்பிகள் அன்பினாலும் , வாழ்த்துக்களினாலும்  இந்த நாள் என் வாழ்வில் தவிர்க்க முடியாதநாளாகிவிட்டது

 பிறந்த நாள் கொண்டாட்டம் தேவைதானா? என்கிற சிந்தனை எனக்கு அவ்வப்போது தோன்றும் ,ஒரு மனிதன் தான் பிறந்ததினால் குடும்பத்திற்கோ ,அவன் வாழ்கிற சமூகத்திற்கோ தினையளவு பயன்பட்டிருந்தால் கூட அவன் பிறந்ததை கொண்டாடலாம் .இப்போது என்னை சுய விமர்சனம் செய்து பார்க்கிறேன்.மற்றவர்களுக்கும் பயன் தரக் கூடிய வகையில் என் வாழ்வை அமைத்திருகிறேனா ?என்று எண்ணி பார்க்கிறேன் . ஆம் !என் வாழ்வில் பொதுநலம் என்னை அறியாமல் இரண்டற கலந்தே இருந்து வருகிறது .அதற்க்கு எவ் வகையிலும் நான் காரணம் இல்லை .பெரியார் என்ற ஒற்றை சொல் எங்களின் வாழ்வியலாய் மாறியது தான் காரணம் என நினைக்கிறேன்.

                                                     

இப்போதும் நான் நன்றியுடன் என் தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் அவர்களை நினைத்து பார்க்கிறேன் .கிராமத்தில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு விதவை மணம் செய்து தனி வாழ்க்கையில் உழைத்து பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று எங்களை உருவாகியதோடு  மட்டும் அல்லாமல் தந்தை பெரியாரின் பகுத்தறிவு மனிதநேய கொள்கையை எங்களுக்கு அறிமுகப்படுத்தி  உலகின் மாபெரும் புரட்சிகர இயக்கமாம் திராவிடர் கழகத்தை ,அதன் தலைவர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களை அடையாளம் காட்டினார் .



   இன்றைக்கும் திராவிடர் கழகத்தில் பலர் இணையலாம் ,வெளியேறலாம் ,ஆனால் நான் அந்த இயக்கத்தில் பிறந்தவன் .தந்தை மறைவுக்கு பின் தனி வாழ்க்கையில் சில துன்பங்கள் வந்த போது மட்டும் அல்ல எனது வாழ்வின் பல முக்கிய முடிவுகள் எடுத்து ,என் மண விழாவை தலைமை ஏற்று நடத்தி  தந்தையாய்,ஆசானாய் ,என்னை வழி நடத்தி மீட்டெத்த என் வாழ்வியல் வழிகாட்டி தமிழர் தலைவர் வீரமணி தான்




      பெரியாரில் தொடங்கி என் தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் ,தமிழர் தலைவர் ,என நான் நன்றி சொல்ல தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே போகும் .இன்றைக்கு எனது வாழ்வு மகிழ்ச்சியான நிறைவான  வாழ்வு ,தனது அன்பினால் என்னை தாங்கும் மனம் நிறைந்த வாழ்க்கை துணைவி வித்யா,அன்பு குழந்தைகள் டார்வினா ,கியுபா.

              இன்றைக்கு வாழ்த்திய பலரின் அன்பினை காணும் போது எதோ பயன்பட்டிருக்கேன் அல்லது தந்தை பெரியாரின் சமுக இயக்கமாம் திராவிடர் கழகம் என்னை பயன்படுத்தி இருக்கிறது  .அதற்காக நான் பெருமைப் படுகிறேன் .இன்றைக்கு வாழ்த்திய அனைவருக்கும் நான் சொல்ல போவது நன்றி அல்ல ! இப்போதை போல் எப்போதும் பெரியாரின் தொண்டனாய் ,மனித நேயத்தை நேசிக்கிற திராவிடர் கழகத் தோழர்களில் ஒருவனாய் ,தமிழினத்திற்க்காய் போராடும் தலைவர் வீரமணி அவர்களின் கட்டுப்பாடுள்ள சிப்பாய்களில் ஒருவனாய் என் வாழ்வு இருக்கும் என்கிற உறுதிமொழியை மட்டும் அளிக்கிறேன் !
                                                                                     என்றும் உங்கள் அன்புடன்
                                                                                          பழ .பிரபு ,D.Pharm.,B.H.M.,M.B.A
                                                                                             

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு மன நோயா ? மத நோயா ?

கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்களை அவரின் கவிதைகள் வாயிலாகவே எனக்கு அறிமுகம் .தமிழை விலை பேசாத அவரின் தன்னிகரில்லா ஆளுமை ,அம்மி கல் குத்த நான் எதற்கு என்று திரைப்படங்களுக்கு பாடல் எழுத மறுத்து காலத்தால் அழிக்க முடியா கவிதைகளை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய அவரின் ஆற்றல் என கவிக்கோவிற்கு இணை கவிகோ தான் !
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டேன் .இறுதி நாள் நிகழ்ச்சியில் கவிக்கோவின் தனியுரை இடம் பெற்றிருந்தது .அவ் வுரை கேட்ட பின் கவிக்கோவின் மீது இருந்த மதிப்பும் ,மரியாதையும் தவிடு பொடியானது .''விலக்கப்பட்ட கனி '' என்கிற தலைப்பில் உரையாற்றினார் .ஆதாம் ஏவாள் கதையினை கூறி விலக்கப்பட்ட கனி என்பது (forbidden fruit )அறிவு தான் .அறிவு ,வளர வளர துன்பங்கள் தான் வரும் .பகுத்தறிவு என்பது மனிதனுக்கு கேடானது ,பறவைகளும் ,விலங்குகளும் மகிழ்ச்சியாய் இருக்கின்றன காரணம் அவைகள் அறிவை பயன்படுத்துவதில்லை .நாத்திகர்களும்  அறிவியல் அறிஞர்களும் தான் முட்டாள்கள் என்று ஒரே போடாய் போட்டவர் அதோடு மட்டும் நிற்கவில்லை .ஆண்கள் அறிவு வயப்பட்டவர்கள் பெண்கள் உணர்ச்சி வயப்பட்டவர்கள் அதனால் தான் சாத்தான் ஏதாம் ஆப்பிள் சாப்பிட தூண்டியது .என்று தொடர்ந்து பெண்ணுரிமைக்கு எதிரான பல கருத்துக்களை கூறிய அவர் இறுதியாக பெண்கள் அதிகம் படிக்க கூடாது படிக்க வேண்டும் என விரும்பினால் +2 அல்லது அதிக பட்சம் BA  வரை படிக்கலாம் பெண்கள் படித்தால் ,வேலைக்கு போனால் தாய்மைக்கு கேடு ,இல்லறத்திற்கு கேடு ,என்றவர் பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டக் கூடாது என்றாரே பார்க்கலாம் ! இப்போது எனக்கு தெரிய வேண்டியது இது ஒரு வகை மன நோயா ? அல்லது இஸ்லாத்தில் ஆழ்ந்து போனதால் வந்த மத நோயா ? எது நடந்திருந்தாலும் சில கவிஞ்சர்களை மது அழித்திருக்கிறது ,சிலரை திரைப்படம் அழித்திருக்கிறது இவரை மதம் அழிக்கிறது ,பரிதாப்படுகிறேன் !

புதன், 11 ஜனவரி, 2012

சுதந்திர தின விழா கொண்டாடிய திமுக தமிழ் புத்தாண்டு கொண்டாட முன் வருமா ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து , அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் உறுதி படுத்திய பின் வரும் முதல் தை ,உள்ளூர் தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் வரை இவ் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டும் .
தை முதல் நாளைத் தமிழ்  புத்தாண்டாகக் கொண்டாடும் வகையில் மூன்றுநாட்கள் (ஜனவரி 15 முதல் 17 வரை) சென்னை பெரியார் திடலில்  திராவிடர் திருநாள் விழாக் கொண்டாடப் படும் என திராவிடர் கழகம் அறிவித்து இன்றைக்கு விடுதலையில்  கரகாட்டம், பொய்க்கால் குதிரை , கட்டை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலைகளும், தமிழர்களின் பாரம்பரிய பல்சுவை உணவு விற்பனைக் கண்காட்சியும் நடைபெரும் எனவும் அறிவித்து சென்னை சங்கமம் இல்லாத குறையை போகிற்று

தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் நிகழ்வில் முதல் நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை, கலை வாணன் குழுவினரின் ஏன் தமிழ் புத்தாண்டு கிராமிய இசை மற்றும் திருச்சி கலைக் குழுவினரின் மார் கழியின் உச்சியில் மலரட்டும் தை ஒலி, ஒளி, நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.
இரண்டாம் நாள் பன்னீர் அவர்களின் தனி ஆவர்த்தனம், திண் டுக்கல் சரவணனின் கவனக நிகழ்ச்சி, ரோபோ சங்கரின் நகைச் சுவை நிகழ்ச்சி, மற்றும் தை -1 தமிழ் புத்தாண்டு விளக்க கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.
இறுதி நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சியும்   தஞ்சை செல்வி கலை குழுவின் கிராமியத் திரை இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.என திராவிடர் கழகம் அறிவித்து செயல் பட்டு வருகிறது
ஆனால் தமிழ் புத்தாண்டை கொண்டாட மொழி,இன ஈடுபாடு மட்டும் அல்ல அரசியல் நெருக்கடியும் கொண்ட திமுக எவ் வித நிகழ்ச்சியும் ஏற்ப்பாடு செய்யாதது உண்மையில் ஏமாற்றம் அளிக்கிறது ,இவ் ஆண்டு முதன் முதலாய் அண்ணா அறிவாலையத்தில் சுதந்திர தின விழா கொண்டடாடிய திமுக தமிழ் புத்தாண்டை ,பொங்கலை அறிவாலையத்தில் கொண்டாட இனியாவது  முன் வருமா ?

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

மாட்டுக்கறி உண்பது குற்றமா ?


இன்றைக்கு வெளி வந்த நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலித்தா   மாட்டுக்கறி உண்ணும் பழக்கமுடையவர் என்று வெளியிடப்பட்ட கட்டுரையால் தமிழகம் முழுக்க அனைத்து கடைகளிலும் நக்கீரன் இதழ் அதிகார தோரணையுடன் பறிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது .நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது .நக்கீரன் ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர் .செய்தியின் உண்மை தன்மை ஆராய்வதற்கு முன் நம் மனதில் எழும் கேள்வி  மாட்டுக்கறி உண்பது அவ்வளவு குற்றமா ?
உலகம் முழுக்க உணவுமுறை என்பது ஒவ்வொரு நாட்டின், ஒவ்வொரு மனித இனக் குழுவின் பண்பாட்டு அடையாளமாகவே இருந்து வருகிறது.உணவுப் பண்பாடு என்பது மத அடிப்படையிலானதாக இல்லாமல் புவியியல் மற்றும் தட்பவெப்பம் சார்ந்ததாக இருப்பதால், எந்த நாடும் தன் மக்கள் இதைத்தான் தின்று தொலைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை; கட்டாயப்படுத்துவதில்லை. அவ்வாறு உட்கொள்ளுவது பாவச் செயல் என்றோ, குறிப்பிட்ட உணவை உண்ணுகிறவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்றோ விலக்கி வைக்கும் வழக்கம் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் பார்ப்பனீயம் ஆழமாக வேர் பிடித்த இந்தியாவில் மாட்டுக்கறி உண்ணுதல் என்பது, தலித் மக்களின்  விருப்ப உணவாக அது கற்ப்பிக்க பட்டு வருகிறது .பார்ப்பனர்களின் சைவ வெறிக்கு முன், சாதி இந்துக்களின் வெறுப்புணர்விற்கு முன், தீண்டத்தகாத மக்களின் மாட்டுக்கறி – தன் எல்லா தகுதிகளையும் இழந்து, போதைப் பொருளைப் போல ரகசியமாக உட்கொள்ளப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

ஆட்டிறைச்சியும், கோழிக்கறியும் முக்கிய சாலைகளில் முகத்திற்கு நேராக விற்கப்படுவதைப் போல, மாட்டுக்கறி விற்கப்படுவதில்லை. மக்கள் புழக்கம் அதிகமுள்ள சாலைகளில் பிற கறிக்கடைகளைப் போல, மாட்டிறைச்சிக் கடைகளை திறந்து வைத்துவிற்கும் துணிவு இங்கு எவருக்குமில்லை. தலித் மக்களும், முஸ்லிம்களும் வசிக்கும் சேரிப் பகுதிகளில் மட்டுமே அவை இயங்குகின்றன. உணவகங்களிலும் இதே நிலைதான். மாட்டுக்கறி உணவு கிடைக்கும் உயர்தர உணவகங்களை எங்கும் பார்க்க முடிவதில்லை. நடுத்தர அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்குகின்றன. மற்றபடி சாக்கடை ஓடும், ஒளியற்ற ஒதுக்குப்புறங்களில் தள்ளுவண்டிகளில் நடத்தப்படும் இரவுக் கடைகளில்தான் மாட்டிறைச்சி உணவு விற்கப்படுகிறது. அதை வாங்கி உண்ணும் மக்கள் தங்கள் முகத்தைப் பிறர் பார்த்துவிடாதவாறு இருளில் பதுங்கியிருந்தபடியே அவசரமாக உண்டு முடிப்பர் அல்லது பொட்டலம் கட்டிக் கொண்டு செல்வர்.
மாட்டுக்கறி உண்பதன் மூலம் தன் சாதி வெளியே தெரிந்துவிடுமோ என்ற பதற்றமும் அச்சமும், வெளியிடத்தில் அதை உண்ணும் ஒவ்வொருவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. தனது விருப்ப உணவை உட்கொள்வதில் இப்படியொரு இழி நெருக்கடி வேறெந்த நாட்டிலாவது எவருக்காவது உண்டாகுமா என வியப்பாக இருக்கிறது. தலித் மக்கள் தங்களின் எல்லைக்குள் மிக சுதந்திரமாக உண்டு களிக்கும் மாட்டிறைச்சியை, பிற சமூகத்தினர் விரும்பினாலும் வெளிப்படையாக உண்ண முடியாது. அதை இந்து சமூகத்தின் ஆதிக்க மூளை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாட்டிறைச்சியை உண்ணுவது, ஜாதி மாறி திருமணம் செய்து கொள்வதைப் போன்றதொரு சனாதனக் குற்றமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், மாட்டிறைச்சி என்பது வெறுமனே உணவல்ல; அது இந்துக்களின் அரசியல்! சாதிய அடுக்கை தக்க வைப்பதற்காகப் பன்னெடுங்காலமாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் சூழ்ச்சி!
மாட்டுக்கறியை சேரி மக்கள்தான் தின்பார்கள் அல்லது தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தால் மட்டுமே மாட்டுக்கறியைத் தின்னத் தோன்றும் என்ற மாயை இங்கு நிலை நாட்டப்பட்டிருக்கிறது. இந்த மாயையை ஆய்வு ரீதியாக முதன் முதலில் தகர்த்தவர் அம்பேத்கர். பகுத்தறிவு ரீதியாக உடைத்தெறிந்தவர் பெரியார். அம்பேத்கரையும் பெரியாரையும் அறிந்து கொள்ள விரும்பாத இந்து பொது சமூகம், மாட்டிறைச்சியை சிந்தனையிலும் எண்ணியிராத புனிதர்களாக தங்களை கருதிக் கொண்டிருக்கிறது. உண்மையில், மேற்கத்தியர்களையும், முஸ்லிம்களையும் போல அனைத்துப் பிரிவு இந்துக்களும் – பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர்; தலித், தலித் அல்லாதவர் என்ற பாகுபாடுகளின்றி எல்லோருமே அசைவர்களாகவும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்ணுகின்றவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர். அதுவே இயற்கை! சைவர்களாகவே தோன்றிய மனித இனம் என ஏதுமில்லை. அப்படியிருந்தால் அது இயற்கை முரண்!
மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை பார்ப்பனர்கள் உண்ணாமல் போனதற்கு – அவர்களின் இந்து மதத்திற்கும், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட நச்சுக் கருத்தியல்களுக்கும் பவுத்தத்தால் உண்டான நெருக்கடியே காரணம். இங்கு வந்து குடியேறிய நாடோடி ஆரியர்களுக்கு, கடவுளுக்கான காணிக்கையாக ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுப்பதும், அதற்கான சடங்குகளை செய்வதும், பலி கொடுத்த விலங்குகளை பாகம் பாகமாக பங்கிட்டு உண்ணுவதும் வழக்கமாகவே இருந்தது. விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்யும் முறை தோன்றும் வரையிலும் ஆரியர்களின் முக்கியத் தொழிலாகவும் உணவீட்டும் முறையாகவும் – இந்த சடங்குகளும் விலங்கு பலியும் இருந்ததற்கான சான்றுகள் வேதத்திலேயே காணக் கிடைப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. வேதங்கள் மட்டுமல்லாமல் இந்து மத நூல்களான மநு தர்மம், உபநிடதங்கள், கிரஹசூத்திரம் என பலவற்றில் இதற்கான சான்றுகள் நிறைந்திருக்கின்றன.
அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிகொடுக்க தகுதியானவை என வேதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை காளையும் பசுவும். சடங்குகளின்றி கடவுளுக்கு காணிக்கையை செலுத்திவிட முடியுமா? பார்ப்பனர்களின்றி சடங்குகள்தான் சாத்தியமா? “பசு, கன்று, குதிரை மற்றும் எறுமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.
“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன” என்றும் “மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில், இறப்பிற்கு பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது.
யாகம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அதைப் பங்கிட்டு ருசித்து உண்ட பார்ப்பனர்களுக்கு இன்று ரத்த நெடியும், மாமிசத் துண்டமும் குமட்டலை உண்டாக்கித் தீண்டத்தகாதவையாக அவற்றை மாற்றியதற்கு காரணம் – பவுத்தத்தின் தீவிரமும் புத்தரின் அறிவுரைகளும்தான்! பார்ப்பனியம் வேரூன்றிய மண்ணில், பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தையும் மூடக் கருத்தியல்களையும் நிராகரித்தபடியே பவுத்தம் பரவத் தொடங்கியது. விவசாய உற்பத்தி ஒரு புரட்சியாக சமூகத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விலங்குகளை பலியிடும் வழக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம், விவசாயப் பணிகளுக்கு இந்த விலங்குகள் உறுதுணையாக இருந்ததுதான். இந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களின் ஒரே அடையாளம் விலங்குகளின் உயிர்ப்பலி மட்டுமே.
அய்நூறு எருதுகள், அய்நூறு ஆண் கன்றுகள், அய்நூறு பெண் கன்றுகள், அய்நூறு ஆடுகள் என இத்தனையும் ஒரே நேரத்தில் வெட்டுக் களத்திற்கு இழுத்து வரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. தெய்வ காரியம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் இதை கொண்டாட்டமாகவே நிகழ்த்தி வந்தனர். இது போன்ற உயிர் பலிகள் ஒருபோதும் நற்பலன்களை தருவதில்லை என புத்தர் அறிவுறுத்தினார். விலங்குகளை தேவையில்லாமல் பலி கொடுப்பதையும், துன்புறுத்துவதையும் எதிர்த்த புத்தரின் கருத்துகள் – புதிய பொருளாதாரப் புரட்சியான விவசாயத்திற்கு ஆதரவானதாக ஏற்கப்பட்டு, முக்கியத்துவத்தைப் பெற்றன.
எனில், புத்தர் சைவரா என்ற கேள்வியும், அவரின் அறிவுரை களால்தான் பார்ப்பனர்கள் திருந்தினார்களா என்ற கேள்வியும் வரும். புத்தர் எப்போதும் சைவராக இருந்ததில்லை. மாட்டிறைச்சி, பன்றிக்கறி என அவர் அசைவ உணவை உண்டவர். உணவுத் தேவைக்காக அன்றி, மதச் சடங்குகளுக்காக எண்ணற்ற விலங்குகளை உயிர்த் தியாகம் என்ற பெயரில் பலி கொடுப்பதையே அவர் எதிர்த்தார். புத்தர் வலியுறுத்தியஅகிம்சையானது, இன்று பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வருவதைப் போன்று, காந்தி வலியுறுத்தியதைப் போன்று கண்மூடித்தனமானதல்ல. படைப்பு என்பதை மறுத்து இயற்கையின் உயிர் சுழற்சி விதியை அவர் ஆழ புரிந்திருந்தார். கண்ணுக்குத் தெரியாத, அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பித்து மக்களை சிறைப்படுத்துவதை விடவும், இயற்கை குறித்த உண்மைகளை எடுத்துரைத்து, மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருந்தவர்களை விடுவிக்க முயன்றார். இதனாலேயே பவுத்தம் பார்ப்பனியத்திற்கான நெருக்கடியாக மாறியது.
தலித் மக்கள் பவுத்தத்தின் பால் ஈர்க்கப்பட்டு, பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருந்தனர். இந்த இக்கட்டினை எதிர்கொண்டாக வேண்டி, தங்களுக்கு பழக்கப்பட்ட மூர்க்கத்தை பயன்படுத்தத் தொடங்கினர் பார்ப்பனர்கள். மன்னர்களை ஏவி பவுத்த துறவிகளை அடித்துத் துன்புறுத்தியதும், போதி மரம் உள்ளிட்ட பவுத்தக் குறியீடுகளை அழித்ததும் பிந்தைய வரலாறாக நடந்து முடிந்தன. பார்ப்பனர்களின் வன்முறையாலேயே பவுத்தம் இந்தியாவிலிருந்து அகற்றப்பட்டது. எனினும் பவுத்தத்தால் புகழிழந்த – விலங்குகள் உயிர்த் தியாகத்தை அதன் பின்னர் கையிலெடுக்க பார்ப்பனர்கள் துணியவில்லை. மாறாக, அவர்கள் இயற்கைக்கு எதிரான, அறிவுக்கு ஒவ்வாத வேறொரு மூடக் கருத்தியலை விதைக்கத் தொடங்கினர். அதுதான் பசுவை புனிதமாக்கி முன் வைத்த புதிய அரசியல்.
புத்தரைக் கடந்து சிந்திக்கவும், பவுத்தம் வளர்த்தெடுத்த பகுத்தறிவை சிதைக்கவும் வேண்டி பசுவை இந்து மதத்தின் புனித அடையாளமாக அறிவித்தனர். பசுவின் உடலில் பல தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாகக் கதையளந்தனர். கிருஷ்ணனை ஆயர் குலத்தில் பிறக்க வைத்து மாடு மேய்க்க வைத்தனர். நன்னாட்கள், விழாக்கள் என எது நடந்தாலும் அதைக் காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்று குவித்த அதே பார்ப்பனர்கள், பசுவுக்கு மரியாதை செய்து புதிய சடங்குகளை உருவாக்கினர். இதற்கு முக்கியமான இன்னொரு காரணம், விவசாயப் பொருளாதாரம் தழைக்கத் தொடங்கிய காலம் என்பதால், உழைக்கும் மக்கள் அனைவருக்குமே கால் நடைகள் மீது பெரிதளவிலான பற்று தோன்றியிருந்தது.
ஏர் பூட்டி உழுதல், கிணற்று நீர் இறைத்தல், போக்குவரத்து, சிறுநீர் மற்றும் சாணம் கொண்டு நிலத்திற்கு உரமேற்றுதல் என கால்நடைகள் விவசாயத்திற்கு பெரிதும் உதவின. இதனால் இயல்பாகவே கால்நடைகளை கண்மூடித்தனமாக பலி கொடுக்க ஒரு எதிர்ப்புணர்வு கிளம்பியிருந்தது. பின்னர் பார்ப்பனர்களுக்கு பிழைக்க என்னதான் வழி? எக்காலத்திலும் உடலுழைப்பு சார்ந்த பணிகளை அவர்கள் செய்ததில்லை. அதனாலேயே பசுவை தெய்வமாக்கி, புதிய சடங்குகளை உருவாக்கினர். பசுவை “மாதா’ என்று அறிவித்து வணங்கத் தொடங்கினர். தலை முதல் வால் வரை எல்லாவற்றையும் ருசித்து உண்டவர்கள் அதற்கு ஈடு செய்யும் விதமாக, பால் முதல் சிறுநீர் வரை அனைத்தையும் புனிதமானதாக அறிவித்தனர்.
தங்கள் தொழிலை வளப்படுத்தும் கால்நடைகளை கடவுளாகவே வணங்கும் மனநிலையில் இருந்த மக்கள், பார்ப்பனர்களின் சடங்குகளை ஏற்கத் தொடங்கியிருக்க வேண்டும். தாங்கள் கைவிட்ட பின்னர் மாட்டிறைச்சியை எவருமே உண்ணக் கூடாது என்ற ஆதிக்க மனப்பான்மையில் பசுவை வெட்டுவதையும் உண்ணுவதையும் பார்ப்பனர்கள் எதிர்க்கத் தொடங்கினர்.
புத்தரின் அகிம்சை அறிவுறுத்தலிலும் உயிர்பலி எதிர்ப்பிலும் சமூக நலன்கள் அடங்கியிருந்தன. ஆனால், உயிர் பலி கொடுப்பதற்கும் சரி, பசுவை புனிதமாக்கி சைவத்திற்கு மாறியதற்கும் சரி, பார்ப்பனர்கள் சொன்ன காரணங்களில் மூடத்தனத்தை தவிர எந்த நியாயங்களும் இருக்கவில்லை. வெட்டுக் களத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அவற்றை தின்று தீர்த்த அதே பார்ப்பனர்கள், பசுவை புனிதமாக்கிய தங்களின் புதிய கொள்கை மாற்றத்திற்கு பின்னர், புத்தர் பசுவை வணங்கவில்லை என்றும் அவர் சைவரில்லை என்றும் பழி சுமத்தத் தொடங்கினர். “கோ மாதா எங்கள் குல மாதா’ என்று பார்ப்பனர்கள் கூவி அழைத்தும் தலித் மக்களும் பவுத்தத்தை பின்பற்றியவர்களும் மாட்டிறைச்சி உண்ணுவதைக் கைவிடவில்லை. காரணம், வலுவாக வேரூன்றியிருந்த சாதிய அமைப்பு, தலித் மக்களை நிலங்களுக்குள் அனுமதிக்கவில்லை. சாதிய அடுக்கில் மேலிருந்தவர்கள் நிலங்களுக்கு உரிமையாளர்களாக விவசாயத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர்.
பொது வளங்கள் எதற்குள்ளும் அனுமதி மறுக்கப்பட்டு, தீண்டாமைச் சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்த சாதி இந்துக்களையும் போல கால்நடைகள் மீது பற்றுக்கொள்ள எந்த நியாயமும் இருக்கவில்லை. சாதி இந்துக்களுக்கு அடிமட்ட வேலைகளைச் செய்வதே தொழிலாக்கப்பட்டு, அதற்கு கூலி என எதுவும் வழங்கப்படாத நிலையில், உணவுக்காக கையேந்தி நிற்கும் அவலச் சூழலில், செத்த மாடுகளும் தீண்டத்தகாத மக்களுக்கு உணவாகின. இந்தப் பின்னணியில் பார்த்தால், மாட்டிறைச்சி வெறுமனே கைவிட முடியாததொரு உணவுப் பழக்கமாகவே தீண்டத்தகாத மக்களிடம் நீடித்து வந்திருப்பது புரிபடும். மாடுகளுக்காகவோ, மாட்டிறைச்சி உண்ணும் விஷயத்திலோ அவர்களுக்கு எவ்விதமான முட்டாள்தனமான பற்றுணர்வுகளும் இருக்கவில்லை.
தங்களிடமிருந்து சுய மரியாதை உட்பட எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்ட பார்ப்பனியத்தின் அறைகூவலை மீறி, தீண்டத்தகாத மக்கள் மாட்டிறைச்சியைத் தொடர்ந்து உண்ணுவது பார்ப்பனியத்திற்கான ஒருவிதமான எதிர்ப்போ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், பார்ப்பனர்கள் மாதா என்றும் புனிதம் என்றும் அறிவித்த ஒன்றை வெட்டி உணவாக்குவது, வெறுமனே ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியாக மட்டுமே நீடித்து வந்திருக்க முடியாது. இந்திய விவசாய முறையின் வெற்றிக்கு முக்கிய காரணம் கால்நடைகள்தான் என பல சர்வதேச ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கால்நடைகளைப் பராமரிக்கும் இந்த விவசாய முறையை இந்து வாழ்வியலாகவே அவை முன் மொழிகின்றன. உண்மையில் அது பவுத்த வாழ்வியல் முறை. புத்தரே கால்நடை பராமரிப்பைத் தொடங்கி வைத்த முதல் மனிதர் என்ற உண்மை முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டது.
அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிகொடுக்க தகுதியானவை என வேதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை காளையும் பசுவும். சடங்குகளின்றி கடவுளுக்கு காணிக்கையை செலுத்திவிட முடியுமா? பார்ப்பனர்களின்றி சடங்குகள்தான் சாத்தியமா? “பசு, கன்று, குதிரை மற்றும் எறுமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.
“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன” என்றும் “மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில், இறப்பிற்கு பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது.
யாகம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அதைப் பங்கிட்டு ருசித்து உண்ட பார்ப்பனர்களுக்கு இன்று ரத்த நெடியும், மாமிசத் துண்டமும் குமட்டலை உண்டாக்கித் தீண்டத்தகாதவையாக அவற்றை மாற்றியதற்கு காரணம் – பவுத்தத்தின் தீவிரமும் புத்தரின் அறிவுரைகளும்தான்! பார்ப்பனியம் வேரூன்றிய மண்ணில், பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தையும் மூடக் கருத்தியல்களையும் நிராகரித்தபடியே பவுத்தம் பரவத் தொடங்கியது. விவசாய உற்பத்தி ஒரு புரட்சியாக சமூகத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விலங்குகளை பலியிடும் வழக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம், விவசாயப் பணிகளுக்கு இந்த விலங்குகள் உறுதுணையாக இருந்ததுதான். இந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களின் ஒரே அடையாளம் விலங்குகளின் உயிர்ப்பலி மட்டுமே.ஆனால் தலித் மக்கள் பவுத்தத்தின் பால் ஈர்க்கப்பட்டு, பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருந்தனர். இந்த இக்கட்டினை எதிர்கொண்டாக வேண்டி, தங்களுக்கு பழக்கப்பட்ட மூர்க்கத்தை பயன்படுத்தத் தொடங்கினர் பார்ப்பனர்கள். மன்னர்களை ஏவி பவுத்த துறவிகளை அடித்துத் துன்புறுத்தியதும், போதி மரம் உள்ளிட்ட பவுத்தக் குறியீடுகளை அழித்ததும் பிந்தைய வரலாறாக நடந்து முடிந்தன. பார்ப்பனர்களின் வன்முறையாலேயே பவுத்தம் இந்தியாவிலிருந்து அகற்றப்பட்டது. எனினும் பவுத்தத்தால் புகழிழந்த – விலங்குகள் உயிர்த் தியாகத்தை அதன் பின்னர் கையிலெடுக்க பார்ப்பனர்கள் துணியவில்லை. மாறாக, அவர்கள் இயற்கைக்கு எதிரான, அறிவுக்கு ஒவ்வாத வேறொரு மூடக் கருத்தியலை விதைக்கத் தொடங்கினர். அதுதான் பசுவை புனிதமாக்கி முன் வைத்த புதிய அரசியல்.
அந்த அரசியலின் பிரதிபலிப்பு தான் இன்றைக்கு நக்கீரன் முலமாக வெளிப்பட்டுள்ளது .இந்த பார்ப்பன சூழ்ச்சிக்கு நமது தமிழர்களும் பலியாகி எதோ  மாட்டுக்கறி உண்பது பெரும் குற்றம் போல காட்டி தமிழகம் முழுக்க ஆர்பாட்டம் நடத்துவதும் பத்திரிக்கையை கொளுத்துவதும் சரியா ? இன மொழி உள்ள தமிழர்கள் சிந்திக்கட்டும்