வெள்ளி, 8 அக்டோபர், 2021

நமீதாவின் நியாயங்களில் நிராகரிக்கப்பட வேண்டிய சில நியாயங்கள் .....




 கடந்த நான்கு  BIGBOSS நிகழ்வுகளை காட்டிலும் இந்த

 BIGG 5 BOSS பாராட்டக்கூடியதாகவே உள்ளது. கிராமிய கலைஞர், திருநங்கை, கானா மற்றும் கிராமிய பாடகர்கள் என ஊடக வெளிச்சம் பெற வேண்டிய கலைஞர்களின் பிரதிநிதிகளாக சிலர் இடம் பெற்று உள்ளனர்

 

நேற்றைய நிகழ்வு குறிப்பாக திருநங்கை நமீதா அவர்கள் பதிவு செய்த மாற்று பாலினம் சந்திக்கும் பிரச்சினைகள் , வலிகள், அவமானங்கள் ,துயரங்கள் விஜய் டிவி என்னும் பெரு ஊடகத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதையாக மாறியுள்ளது என்றால்  மிகையில்லை

 

நமீதா தன் வாழ்க்கை குறித்து பதிவு செய்யும்போது கசிந்துருகாத உள்ளங்களே இருக்காது . நிச்சயம் நமீதா சாதனையாளர் தான். மாற்று கருத்துக்கு இடமில்லை .ஆனால் அவர் வாழ்வில் மனநல மருத்துவர்கள், மன நல மருத்துவமனைகள் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் , பாலின மாற்றுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறியதை உளவியல் ஆலோசகராக என்னால் நம்ப இயலவில்லை

 

மாற்று பாலினம் குறித்த சிக்கல்களை முழுமையாக அறிந்தவர்கள் தான் மன நல மருத்துவராகவும் மன நல ஆலோசகராகவும் இருக்க இயலும்.  நானறிந்த வரை அவர் கூறியது போன்று உளவியல் கற்ற ஒருவரும் நடந்திருக்க மாட்டார்.   நமீதா கொஞ்சம் மிகைப்படுத்தி கூறி இருக்க வேண்டும் அல்லது முறையான மன நல மருத்துவரையோ./ஆலோசகரையோ சந்தித்திராமல் இருக்க வேண்டும்

 

இன்றைக்கு மாற்று பாலினம் போராடி சிறிதளவாவது பெற்றிருக்கிற சமூக அங்கீகாரத்திற்க்கு பின்புலத்தில் ஆயிரமாயிரம் மன நல மருத்துவர்கள் /மன நல ஆலோசகர்கள் , சமூக சேவகர்களின் பங்களிப்பு இருக்கிறது. நமீதா அவர்களின் வாழ்க்கையிலிருந்து அது தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடாது

 

மற்றபடி நமீதா அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு சோற்றுக்கு ஒரு பதம் போன்றது தான் . இது போல அல்லது இதைவிட துயரமான பல மாற்று பாலினத்தவர்கள் வாழ்க்கை இருக்கிறது. பாலின சமத்துவம்  நோக்கிய பயணத்தில் நாம் இன்னும் தொடக்க நிலையில் தான் இருக்கிறோம்

 

#VijayTelevision

#BiggBossTamil5

#BiggBoss

#bigbosstamil

#biggboss5namitha

#NamithaMarimuthu

#BiggBoss5Tamil

சனி, 8 ஆகஸ்ட், 2020

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஆண்களுக்கான நீதிநூல் ! “உங்கள் மகனிடம் சொல்லுங்கள்”


நியாண்டார் செல்வன் – ஒரு மந்திர சொல் !

ஆம் ! முகநூலில் ஆரோக்கியம் –நலவாழ்வு குழுமத்தை பின் தொடரும் ஏறக்குறைய ஆறு இலட்சம் பேருக்கு அந்த பெயர் ஒரு மந்திரசொல்லாகவே இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இந்த கொங்கு நாட்டு தமிழர் தன் வாழ்வில் கண்டுணர்ந்த உணவு பழக்கத்தை மருத்துவ அறிவியல் சான்றுகளுடன் முகநூலில் எழுத ஆரம்பித்து இன்றைக்கு ஒரு பெரும் இயக்கமாக ஜாதி ,மதம் ,மொழி ,அரசியல் ,நாடு என எல்லா எல்லைகளையும் தாண்டி இயங்கி கொண்டிருக்கிறது

 

மொழி உணர்வின் அடிப்படையில் , அரசியல் தத்துவங்களின் அடிப்படையில் கடவுள் ,மதம் ,ஜாதி , ஆத்திகம், நாத்திகம், இனம் என பலவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சமூகம் உணவு குறித்தும் உடல் நலம் குறித்தும் சிந்தித்து ஒருங்கிணைவது தமிழ் சூழலில் வியப்பாக இருக்கிறது.இந்த மாற்றத்தை நிகழ்த்தியவர் தான்  நியாண்டார் செல்வன் .பேலியோ உணவு என அழைக்கப்படும் தொல்லுணவை தென் இந்தியர்களின் உணவு பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைத்து அறிமுகப்படுத்தியவர் .

 

பேலியோவை தொடர்ந்து மினிமலிசம் குறித்தும் எழுதியும் பேசியும் வருகிறார். 2016 ஆம் ஆண்டு அவர் எழுதிய “பேலியோ டயட்” என்னும் நூல் விற்பனையில் சரித்திர சாதனை படைத்தது .அதன் பின்னர் குமுதம் இதழில் எழுதி பின்னர் நூலாக வெளிவந்த “வாழ்க கொழுப்புடன்” பெரும் வரவேற்பை பெற்றது .இப்போது “உங்கள் மகனிடம் சொல்லுங்கள்” என்னும் நூலை அமேசான் கிண்டில்-லில் மின் நூலாக வெளியிட்டுள்ளார் . நூல்  வெளியாகி 12 மணி நேரத்திற்குள் உலகின் மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூல்களின் விற்பனையை தாண்டி முதலிடத்தில் வந்தது. இன்னும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது . ஆண் –பெண் உளவியல் சிக்கல்கள் குறித்தும் ஆண்-பெண் உறவு எத்தகையதாக இருத்தல் அவசியம் என்பதையும்  தான் படித்த செவ்விலக்கியங்களில் இருந்தும் தன் அனுபவ அறிவிலும் Evolutionary psychology துறை காட்டும் கோணத்திலும் இந்த நூலை எழுதி உள்ளார்

 

ஆண் - பெண் உளவியல் குறித்து உளவியலாளர்கள் நூல் எழுதி இருப்பதை அறிந்திருக்கிறோம், மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்து கார்ப்பரேட்  சாமியார்கள் பேசுவதையும் எழுதி வருவதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் ஒரு உளவியலாளர் நிலையில் இருந்து ஆண்களின் உளவியல் குறித்தும் ,பதின் பருவ சிக்கல்கள் குறித்தும் ,வாழ்வில் வெற்றி பெற தேவையானது குறித்தும் ,மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை என்பது குறித்தும் சின்ன சின்ன உதாரணங்களை காட்டி சுவைபட நியாண்டார் செல்வன் விளக்கி உள்ளார்

 

ஆண்மை என்றால் என்ன ? ஆண்மையின் இலக்கணம் என்ன ? என்கிற கேள்விக்கான பதிலில் இருந்து தமது நூலை தொடங்கி ஆண் ஆதிக்கம், ஆண் பெண் உறவு, பாலியல் சுதந்திரம், நட்பு காதல், திருமணம்,கணவன் மனைவி உறவு,தொழில் , உணவு , உடல் ஆரோக்கியம் , குடும்ப சிக்கல்கள் , முதுமை என பலவற்றை குறித்தும் எழுத்தின் வடிவத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார் . பல இடங்களில் மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும்   நீட்சேயின் தத்துவங்களையும்  திருக்குறளை ஒத்த  இலக்கிய நூல்களின் தரவுகளையும்    சுட்டிக்காட்டி இருக்கிறார்.  கிரேக்க கதைகளை ஆங்காங்கே உதாரணம் காட்டி உள்ளார் .

 

ஆண்களை குறிவைத்து அவர்களின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வு காண எழுதிய நூல் என்பதால் பெண்களுக்கு இதை படிக்கையில் இது நமக்காக எழுதபட்டது அல்ல என்பது போல் தோன்றலாம் என அஞ்சினேன். ஆனால் கட்டுரைதொடர் முகநூலில் வெளிவருகையில் ஆர்வத்துடன் அதை பகிர்ந்து, கருத்திட்டு வாழ்த்தியவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பலரும் தம் வாழ்வின் முக்கியமான ஆண்களான மகன், கணவ்ர், சகோதரன் போன்றோரை கட்டுரையில் டேக் செய்ததையும் காணமுடிந்தது. அது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.  பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் நல்லபடி வாழ, ஆண்வர்க்கத்தை தலைமை பொறுப்பு மிக்கவர்களாக, ஆளுமைத்திறன் மிக்கவர்களாக ஆக்குவது அவசியம். ஆண்கள் தம் குறைகளை களைந்து மேலே உயர்ந்தால் அது அவர்களின் மகள்கள், மனைவியர், சகோதரியர், தாய்மார்கள் என பெண் இனத்துக்கே பயனளிக்கும் விசயம். ஆக இதை ஒருவிதத்தில் தமிழில் ஆண்களுக்கு எழுதபட்ட முதல் நீதிநூல் எனவும் கொள்ளலாம் என்று தமது முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் நியாண்டர் செல்வன் .

 

அவ்வாறே பதின்பருவத்தை தொடும் இளைஞனுக்கு அவனுக்கு புரியும்படி வகுப்பு எடுப்பதை போல் எழுத்தில் ஒரு உரையாடல் நிகழ்த்தி இருக்கிறார். இளைஞனை  குறிவைத்து எழுதப்பட்டாலும் ஒவ்வொரு பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது .

 

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்

என்று பதின் பருவ மன நிலையை விவரித்து கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் குறிப்பிடுவதை போல  அண்மைகாலங்களில்  பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் ஏற்படும் பதின் பருவ காதல்  மாணவர்களுக்கு   கவன சிதறலாக மாறுவதுடன்  மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது கல்வியில் அவர்கள் அடையவேண்டிய இலக்கிலிருந்து அவர்களை திசை மாற்றுவதுடன் பெற்றோர்களுக்கு பிள்ளைகளுக்குமான உறவில் பெரும் இடைவெளியையும் சச்சரவையும் ஏற்படுத்துகிறது .இது குறித்து இந்த நூல் விரிவாக விவாதிக்கிறது

 உலகில் மனித இனம் தோன்றிய ஆரம்ப காலகட்டத்தில் தாய் வழிச்சமூகமே இருந்து வந்ததை வால்கா முதல் கங்கை வரை நூலில் ராகுல் சாங்கிருத்தியாயன் குறிப்பிடுவார் பெண் தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு முக்கிய காரணம் அவை தோன்றிய சமுதாயத்தில் தாய்வழி முறை நிலவியதே என்று பல ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள் நூலாசிரியரும் ஆண்,பெண் சமம் அல்ல.  பெண் பிறப்பால் ஆணைவிட உயர்ந்தவள்  மேன்மை அவளுக்கு பிறப்பால் வருகிறது என்பதுடன் வலுவானது ஆண்மை  வீரம் நிரம்பியது பெண்மை  வலிமையால் வீரத்தை வெற்றி கொள்ள முடியாது என்றும் பாலியல் சுதந்திரம் உண்மையில் ஆண்களுக்கு அவசியமில்லை, பெண்களுக்கு தான் அவசியம் என்பதையும் கூறி விளக்குகிறார் 

அதே நேரத்தில் ஆணாதிக்கவாதி என்கிற தலைப்பில் அவர் முன்வைத்துள்ள கருத்துக்கள் சிலவும் எடுத்துக்காட்டுகள் ஒன்றிரண்டும் சில நெருடல்களை உருவாக்குகிறது .


“ஆணாதிக்கவாதி என அவர்களை மற்றவர்கள் நினைப்பார்கள்.  ஆனால் அவர்களோ காபி வைக்க கூட மனைவியை நம்பியிருப்பார்கள். தன் அன்றாட வேலையை தான் செய்துகொள்ள கூட தெரியாதவன் எப்படி ஆதிக்கவாதியாக இருப்பான்? ஆயுள் முழுக்க அவன் பெண்களை நம்பியே இருக்கிறான்

 

ஆணாதிக்கம் என சொல்லபடுவது முழுக்க அதிகாரத்தை பெண்களின் கையில் ஒப்படைக்கும் விசயமாகவே உள்ளது. இது போலியான ஆணாதிக்கம்.  உண்மையான ஆணாதிக்கம் என்றால் என்ன? பலரும் நினைப்பதுபோல் ஆணாதிக்கம் தவறான விசயம் அல்ல. ஆண்-பெண் சமநிலை விரும்பதக்கதும் அல்ல.

 

ஆண்மை அதன் இயல்பிலும், பெண்மை அதன்இயல்பிலும் இருக்க அனுமதிக்கும் சமூகங்களிலேயே உண்மையான சமத்துவம் நிலவ இயலும்.

 

நூலின் வெவ்வேறு பக்கங்களில் இத்தகைய கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தாலும் நூலை  திரும்ப நினைவு கூர்ந்து பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தோன்றுகிறது. இன்றைக்கும் கிராமங்களில் அடித்தட்டு மக்களில் பெண்கள் வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவதும் ,அவளின் கணவன் வெட்டியாய் ஊரை சுற்றி விட்டு குடித்துவிட்டு மனைவியை அடித்து கொடுமைபடுத்துவதும் பார்க்கிறோம் .தனது அன்றாட அத்தியாவசிய தேவைக்கு கூட மனைவியை சார்ந்து இருக்கிறவன் .ஆண் என்கிற காரணத்தினாலேயே பெண்ணை அடிமையாக நடத்துவதை பார்க்கிறோம் . தன் அன்றாட வேலையை தான் செய்துகொள்ள கூட தெரியாதவன் எப்படி ஆதிக்கவாதியாக இருப்பான்? என்று நூலாசிரியர் கேட்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை

 

உழைக்கும் கிராமத்து மக்களின் வாழ்வியல் சிக்கல்களை கவனத்தில் கொள்ளாமல் மேல்தட்டு குடும்பங்களின் சூழலில் இருந்து ஆணாதிக்கத்தை அணுகி உள்ளாரோ என்கிற அய்யம் எழுகிறது .அதே போல் ஆண் பெண் உறவுகளில் தோழமையை வரவேற்கும் நூலாசிரியர் சமநிலை விரும்பத்தக்கது அல்ல என்கிறார். பெண்களுக்கு சம உரிமை கொடுத்து தோழமை பாராட்ட கற்று தருவது தான் இந்த நூலின் அடிப்படை நோக்கங்களுக்கு வலு சேர்க்கும் ஆனால் ஆண்-பெண் சமநிலை விரும்பதக்கதும் அல்ல என்று சொல்லும்போது தேவையற்ற ஒரு குழப்பம் ஏற்படுவதாக உணர்கிறேன்

 

அதே போல் தனித்தனி கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல் என்பதால் படிக்கும்போது அதன் தொடர்ச்சி விடுபடுகிறது .அதே போல் எழுத்து பிழைகளை களைய  கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம் .இப்படி சின்ன சின்ன குறைகள் எனக்கு தென்பட்டாலும் ஓர் உயரிய நோக்கத்தோடு எழுதப்பட்ட இந்த நூல் அந்த நோக்கத்தை பெருமளவு நிறைவு செய்திருக்கிறது.

 

பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில் பேசியிருக்கிறது இந்த நூல். இன்றைய தலைமுறை அவசியம் இந்த நூலை படிக்க வேண்டும் . அல்லது இந்த நூல் பேசியிருக்கிற செய்திகளை இன்றைய தலைமுறையோடு பேச வேண்டும். பள்ளி கல்லூரிகளில் நூல் குறித்த அறிமுகக் கூட்டங்கள் , நூல் குறித்த விவாதங்கள் , சிறப்பு கூட்டங்கள்  நடத்தி இளம் தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். நியாண்டர் செல்வன் தேரின் வடத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் .எல்லா ஊர்களுக்கும் எல்லா தெருக்களுக்கும் தேரை இழுத்து செல்வது நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி . அதற்கு முதல் கட்டமாக நூலை வாங்கி அவசியம் படியுங்கள் !


வெள்ளி, 6 மார்ச், 2020

நான் சொல்லப்போவது நன்றி அல்ல !


மார்ச் 6 !    எனது பிறந்த நாள் என்னை பொறுத்தவரை வழக்கம் போல் இதுவும் மற்றொருநாள் தான், ஆனால் குடும்பத்தினர் நண்பர்கள்   (முகநூல் நண்பர்களையும் சேர்த்தே சொல்கிறேன்)  தோழர்கள் ஊழியர்கள் நலம் விரும்பிகள் என அனைவரின் அன்பினாலும் வாழ்த்துக்களினாலும்  இந்த நாள் என் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகிவிட்டது
                                  


 பிறந்த நாள் கொண்டாட்டம் தேவைதானா?  என்கிற சிந்தனை எனக்கு அவ்வப்போது தோன்றும் , ஒரு மனிதன் தான் பிறந்ததினால் குடும்பத்திற்கோ அவன் வாழ்கிற சமூகத்திற்கோ தினையளவு பயன்பட்டிருந்தால் கூட அவன் பிறந்ததை கொண்டாடலாம் .இப்போது என்னை சுய விமர்சனம் செய்து பார்க்கிறேன். மற்றவர்களுக்கும் பயன் தரக் கூடிய வகையில் என் வாழ்வை அமைத்திருகிறேனா? என்று எண்ணி பார்க்கிறேன். ஆம் ! என் வாழ்வில் பொதுநலம் என்னை அறியாமல் இரண்டற கலந்தே இருந்து வருகிறது .அதற்கு எவ் வகையிலும் நான் காரணம் இல்லை .பெரியார் என்ற ஒற்றை சொல் எங்களின் வாழ்வியலாய் மாறியது தான் காரணம் என நினைக்கிறேன்
                                   

     
இப்போதும் நான் நன்றியுடன் என் தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் அவர்களை நினைத்து பார்க்கிறேன் கிராமத்தில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர மணம் முடித்து  தனி வாழ்க்கையில் உழைத்து பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று எங்களை உருவாக்கியதோடு  மட்டும் அல்லாமல் தந்தை பெரியாரின் பகுத்தறிவு மனிதநேய கொள்கையை எங்களுக்கு அறிமுகப்படுத்தி  உலகின் மாபெரும் புரட்சிகர இயக்கமாம் திராவிடர் கழகத்தை அதன் தலைவர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களை அடையாளம் காட்டினார் .
                               


 இன்றைக்கும் திராவிடர் கழகத்தில் பலர் இணையலாம் வெளியேறலாம் ஆனால் நான் அந்த இயக்கத்தில் பிறந்தவன் தந்தை மறைவுக்கு பின் தனி வாழ்க்கையில் சில துன்பங்கள் வந்த போது மட்டும் அல்ல எனது வாழ்வின் பல முக்கிய முடிவுகள் எடுத்து  என் மண விழாவை தலைமை ஏற்று நடத்தி  தந்தையாய் ஆசானாய்  என்னை வழி நடத்தி மீட்டெத்த என் வாழ்வியல் வழிகாட்டி தமிழர் தலைவர் வீரமணி தான் 


      பெரியாரில் தொடங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி என் தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் தாய்பாலோடு பகுத்தறிவையும் கற்றுக்கொடுத்த என் தாயார் கலைமணி  தோழனாய் தோள்கொடுத்து நிற்கும் அன்பு சகோதரர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு என நான் நன்றி சொல்ல தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இன்றைக்கு எனது வாழ்வு மகிழ்ச்சியான நிறைவான  வாழ்வு தனது அன்பினால் என்னை தாங்கும் மனம் நிறைந்த வாழ்க்கை துணைவி வித்யா, அன்பு குழந்தைகள் டார்வினா கியூபா என வாழ்க்கை பயணம் பயணித்துக் கொண்டிருக்கிறது


இன்றைக்கு வாழ்த்திய பலரின் அன்பினை காணும் போது எதோ பயன்பட்டிருக்கேன் அல்லது தந்தை பெரியாரின் சமுக இயக்கமாம் திராவிடர் கழகம் என்னை பயன்படுத்தி இருக்கிறது  அதற்காக நான் பெருமைப் படுகிறேன் இன்றைக்கு வாழ்த்திய அனைவருக்கும் நான் சொல்ல போவது நன்றி அல்ல ! இப்போது  போல் எப்போதும் பெரியாரின் தொண்டனாய் மனித நேயத்தை நேசிக்கிற திராவிடர் கழகத் தோழர்களில் ஒருவனாய் தமிழினத்திற்க்காய் போராடும் தலைவர் வீரமணி அவர்களின் கட்டுப்பாடுள்ள சிப்பாய்களில் ஒருவனாய் என் வாழ்வு இருக்கும் என்கிற உறுதிமொழியை மட்டும் அளிக்கிறேன் !
                                                                                    
என்றும் உங்கள் அன்புடன்
 பழ .பிரபு

திங்கள், 20 மே, 2019

சேகுவேரா


                                               சேகுவேரா 

                            தொகுப்பு : மருத்துவர் .பழ .ஜெகன்பாபு 


 
உலகத்தின் மிகச்சிறந்த போராளி. புரட்சியாளன்  என்று சொன்னால் அது ஒன்றும் மிகைப்படுத்தல் ஆகாது

ஏனெனில் ஒரு புரட்சியாளர் எப்போது உருவாகிறான்:

Ø தனது இனம் , மொழி அல்லது தனது  நாடு ஒடுக்கப்படும் போது அல்லது அடிமைப்படுத்தப் படும் போதும்

Ø  வறிய ஏழைக் குடும்பத்தில் உழன்று  சமூகத்தின் மேல் கோபம் எழும்போது

Ø படித்து வேலை வாய்ப்பு இல்லாமல் அலையும் போது


இந்த  எந்த வரையறையிலும்  சேகுவேரா இணைத்துப்  பார்க்க முடியாது

ஏனெனில் அவள் புரட்சியில் பங்கெடுத்த எந்த நாடும் இவரின் சொந்த நாடு கிடையாது.

 வசதியான குடும்பத்தில் பிறந்து நல்ல கல்வி பெற்று பின் மருத்துவராக பட்டம் பெற்றவர்.

எனினும் முதலாளித்துவ ஏகாதிபத்திய எங்கெல்லாம் தன் குணத்தைக் காட்டுகிறதோ  அங்கெல்லாம் சென்று போரிட்டார்.

“உலகில் எந்தெந்த நாடுகளெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறதோ அவை எல்லாம் என் நாடு” என்று பரந்த மனத்துடன் கூறிய வீரர் இந்த சேகுவேரா

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபப் புரட்சியில்  வெற்றி கண்ட நாயகனாக நின்று, அதன் பின் ஆப்பிரிக்க கண்டத்து  காங்கோவில் போராடி  விட்டு , இறுதியாக பொலிவியாவில் போராடி அங்கே சுட்டுக் கொல்லப்பட்டார்

இதனை மேம்போக்காக படிக்கும்போது புரட்சி , புரட்சி என்று பேசி தெரியும் இயல்பு வாழ்க்கை பற்றி தெரியாத ஒரு இளைஞன் என்று எண்ணத் தோன்றினால் உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. அவர் கியூபப் புரட்சிக்குப் பின் அந்த நாட்டின் தலைமை வங்கிக்கு (ரிசர்வ் பேங்க் போன்றது) தலைவராக இருந்தார். கியூபாவில்  பணத்தாள்கள் அவர் கையொப்பத்துடன் தான் வெளிவந்தது. பின் கூடுதலாக தொழில் அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அப்போது பல்வேறு நாடுகளுக்குச் சென்று கியூபாவின் தொழில் வளர்ச்சிக்கு வழி தேடினார் . பல்வேறு மாநாடுகளில் உரையாற்றினார். ஆனால் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையினால் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தயங்கினர். புரட்சிக்குப் பின் கியூப அரசமைப்பு ஒரு நல்ல நிலை பெற்ற பின் தன் பதவி, குடியுரிமை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு அடுத்து களம் நோக்கி புறப்பட்டார். உலகத் தலைவர்களோடும்  பல பிரதமர்களோடு விமானத்தில் பறந்து உயர்ந்த உணவு உண்டவர். அதை எல்லாம் உதறி தள்ளி  ஒரே நாளில் கடுமையான சூழலில் சரியான உணவு, உறைவிடம் இல்லாத ஆப்பிரிக்க காடுகளில் புரட்சியை முன்னெடுக்க  பயணித்தார்.


சில வாழ்க்கை குறிப்புகள்

“எர்னஸ்ட்டோ குவேரா டி-லா- செர்னா “ என்பது தான் அவர் பெற்றோர் இட்ட பெயர். எர்னஸ்ட்டோ தந்தையின் பெயர். “குவேரா”  குடும்பப் பெயர்

இது “சே” என்பது போராளித் தோழர்களால் சூட்டப்பட்ட புனைப் பெயர் .


 சே பிறந்தது 1928 , ஜூன் 14 குறைமாதக் குழந்தையாக ஒன்பதாவது  மாதத்தில்  பிறந்தார் . அவரின் பெற்றோர் ஸ்பெயின் வம்சாவழி வந்தவர்கள்.
   மூன்றாவது வயது முதலே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டார். அது கடைசி வரை அவரை தொல்லைப்படுத்தியது

 மாணவப் பருவத்தில் மொபெட் வண்டியில் பனிரெண்டு மாகாணங்களை  சுற்றி வந்தார்.

அப்போதும் தொழுநோய் மருத்துவமனைக்கு  சென்று பல நாட்கள் தங்கி தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்தார்

1953இல் மருத்துவப் பட்டம் பெற்றார்

அதன்பின் தொழிற்சங்கங்களில்  இணைந்து போராடினார். தொழிற்சங்கத் தலைவர் ஆவதற்காக  சுரங்க தொழிலாளியாய் பணியாற்றினார்.

ஒவ்வாமை(Allergy ) துறையில் ஆய்வு மாணவராகவும்  பணியாற்றி உள்ளார்.

1954-ல் மெக்சிகோவில் மத்திய மருத்துவமனையில் மருத்துவராக  பணிபுரிந்தார்  

மெக்சிகோவில் உள்ள போதுதான்  பிடலை சந்திக்கிறார். முதல் தாக்குதல் (ஜூலை 26, 1953) தோல்விக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ பின் விடுதலை செய்யப்பட்டவுடன் மெக்ஸிகோ செல்கிறார் .

1956 ஜூன் 4 , மெக்ஸிகோவில் சேவும் பிடலும் தோழர்களும் மெக்ஸிகோ அரசால் கைது செய்யப்படுகின்றனர். பின் நவம்பர் மாதம் வெளியாகி 81 போராளிகளுடன்  கிராண்மா என்ற படகில் கியூபாவை  வந்தடைகின்றனர்.

பின்பு கியூபாவில் புரட்சி படையை செழுமைப்படுத்தி புரட்சிக்கு தயார் செய்தனர்.

 புரட்சிப் படையின் மருத்துவராக இணைந்த  சேகுவாரா பின்  புரட்சிப் படையின் கமாண்டராக” ஒரு பிரிவின் தளபதியாக செயல்பட்டார்

கியூப புரட்சிக்குப்பின் மத்திய வங்கியின்  தலைவராக தொழில் அமைச்சராக பணிபுரிந்தார்.

 பின் மீண்டும் பிற நாடுகளுக்குச் சென்று புரட்சிப் படைகளை உருவாக்கினார்.காங்கோவிலும்  பின் பொலிவியாவிலும்  கொரில்லாப் படைக்கு  தலைமை ஏற்றார் .

1967 ,அக்டோபர் குவேராவின் கொரில்லா படையினரை பொலிவியா மற்றும் அமெரிக்க ராணுவப்படையினர் சுற்றி வளைத்து கடும் சேதம் ஏற்படுத்தினர்.

அக்டோபர் 8, 1967 குவேரா  படுகாயத்துடன் அரசுப் படையால்  பிடிக்கப்படுகிறார். மறுநாள் சேகுவேரா சுட்டுக் கொல்லப்படுகிறார்

அவர் இறந்து சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பின் பொலிவியாவில்  அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து  தோண்டி எடுக்கப்பட்டு,கியூபாவில்  சாண்டாகிளாரா நகரத்தில் சேகுவராவும் அவரது தோழர்களும்  அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டனர்



இத்தனையும் 39 வருடம் 45 நாட்களுக்குள் சேகுவேரா சாதித்தவை. சேவின்  வாழ்க்கையில்  பல பரிணாமங்களை பார்க்கிறோம். இளமை வேகமும் துடிப்பும் கொண்ட இளைஞராக, போர்க்களத்தில் ஆயுதபாணியாக நிற்கும் கொரில்லா வீரனாக ,கியூபாவின்  பொருளாதார நிர்வாகியாக என்று  பல வடிவங்களில்  சேகுவேரா பரிணமித்துள்ளார்.  

கியூபாவை விட்டுக் கடைசியாக  சேகுவரா வெளியேறும் போது தன் நண்பருக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார். அதில் “எனது வீடு என்பது என் இரு கால்கள்  என்று மீண்டும் ஆகியிருக்கிறது என் கனவுகளுக்கு எல்லையோ  முடிவோ இல்லை அல்லது துப்பாக்கி குண்டுகள் வேறொன்றை முடிவு செய்யும்வரை” என குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான் அவரது கனவுகளுக்கு  எல்லைகளே  இல்லை. சமத்துவமும் மானிட விடுதலையுமே  அவரின்  வேட்கையாக  இருந்தது. இப்படி எல்லைகளைக் கடந்து சிந்தித்த போராளி வேறு யாரும் உலக வரலாற்றில் இல்லை எனலாம்.

அதனாலயே இன்றும் புரட்சி என்ற சொல் ஒலிக்கப்படும் போது “சே” நினைவுக்கு வருகிறார். ஒருவர் மறைந்து காலங்கள் ஓட ஓட அவர்களின் நினைவுகள் சமுதாயத்தில்  மங்கிவிடும் . ஆனால் “சே”  எதிலும் வித்தியாசமானவர். மறைந்து காலங்கள் அதிகமாக உருண்டோடும் போது தான் அவர்  உலகில் அதிகம் அறியப்பட்டுள்ளார்


சில தகவல்கள்

அவர் மாணவப் பருவத்தில் பயணம் மேற்கொண்டபோது தொழுநோயாளிகளுடன்  ஒன்றாகத் தங்கி அவர்களுடனே உணவு உட்கொண்டு கட்டியணைத்து அவர்கள்
 வாழ்க்கையே  மாற்றியதோடு மட்டுமின்றி அங்குள்ள மருத்துவர்களும் அவ்வாறே பழகுமாறு செய்தார் .

கியூப புரட்சியின்போது ராணுவ முகாம் தாக்குதல் சமயங்களில் எதிரி பாடிஸ்டா படை வீரர்கள் காயமுற்று இருந்தாலும் ,மருத்துவராக அவர்களுக்கு சிகிச்சை அளித்த மனிதநேயக்காரர் சேகுவேரா .

பிடலை முதல் முறையாக மெக்ஸிகோவில் சந்தித்த போது அன்று இரவெல்லாம் கியூபாவைப் பற்றி உரையாடினார். சே சொல்கிறார்  “இரவு முழுக்க பிடல் பேசினார் பொழுது விடியும்போது நான் அவரோடு புரட்சியில் பங்கெடுப்பது  என முடிவு செய்து விட்டேன்” என்கிறார் ஒரே நாளில் மருத்துவப் பணியை கை விட்டு புரட்சி படையில் இணைகிறார்

சேகுவேராவும் பிடலும் அமைச்சர்கள் ஆன பின்பும் பல நாட்கள் கரும்பு தோட்டத்தில் கரும்புகளை வெட்டினர்.


கியூபா  புரட்சி முடிந்து அமெரிக்க அரசு அமைக்கப்பட்ட பின் அமெரிக்க ஏவிவிட்ட கூலிப்படை பன்றி வளைகுடா பகுதியில்  தாக்குதல் நடத்தியபோது சேகுவரா தானே களத்தில் நின்று (தொழில் அமைச்சர் ஆன பின்பும்) போரிட்டு வெற்றி பெற்றார்


சே புதைக்கப்படவில்லை
புரட்சியாளராக விதைக்கப்பட்டிருக்கிறார் !

பிடல் காஸ்ட்ரோ

                                      பிடல் காஸ்ட்ரோ

                                தொகுப்பு:மருத்துவர்.பழ.ஜெகன்பாபு

 பிடல் காஸ்ட்ரோ –கியூபாவின் நாயகர் .இருபதாம் நூற்றாண்டு கண்டிட்ட  இணையற்ற உலக புரட்சியாளர்.
ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு  தம் வாழ்நாள் முழுவதும்  சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் .  

            அமெரிக்காவின் ஒரு மிகச் சிறிய மாநிலத்தின் அளவு கூட இல்லாத நாடு கியூபா . அந்த நாட்டிலிருந்து சர்வதேச வல்லாதிக்க நாடான அமெரிக்காவுக்கு ஒரு சவால் விட்டவர் தான்  பிடல் காஸ்ட்ரோ .

நிலப் பண்ணையாரின் மகனாக பிறந்தவர்.ஆனால்  சிறு விவசாயிகளுக்கும் விவசாய கூலிகளுக்குமாய் போராடியவர் . கம்யூனிச எதிர்ப்புணர்வு கொண்ட ஆர்தோடக்ஸ் கட்சியில் இணைந்து பின் கம்யூனிஸ்டாக மாறி கியூபாவை சோசலிச ,கம்யூனிஸ்ட் நாடாக அறிவித்தவர். இப்படி பல சுவரஸ்யமான தகவல்களை கொண்டது பிடலின் வாழ்க்கை .

1926 இல் பிறந்தவர் .  26 வயதில் 1952-இல்  முதல் புரட்சி தாக்குதலை  நடத்தினார்.மரணிக்கும் வரை அதே போன்று மன உறுதியும் ,  போராட்ட குணமும் கொண்டவராக திகழ்ந்தார்  

2002 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் புஷ் , பிரிட்டன் ,ஆஸ்திரேலியா நாடுகளின் துணையோடு ஈராக் மீது தாக்குதல் நடத்தினார் .

 அப்போது புஷ் ஈரான் , சிரியா , வடகொரியா , கியூபா ஆகிய நாடுகளையும் குறிப்பிட்டு ரவுடி நாடுகள் எனக்  குறிப்பிட்டு அவற்றையும் தாக்குவோம் என்றார்  உலக நாடுகள் பலவும் கண்டித்தன.

சில நாட்கள் கழித்து பள்ளிகளில் மாணவர்களிடையே பிடல் பேசும்போது “இப்போதும் புஷ் ஆண்டவன் இட்ட கட்டளை என்கிறார் . ஆண்டவனிடம் நெருக்கமாக உள்ள போப் ஆண்டவரோ  இது சாத்தானின் வேலை என்கிறார். புஷ்க்கு  ஒரு கடவுள். போப்புக்கு  இன்னொரு கடவுளா ? இதை அவர்களே தீர்மானிக்கட்டும்.  பைபிளை தொட்டு சத்தியம் செய்து பதவியேற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தான் ஜப்பானில் குண்டு  போட்டார். வியட்நாமில் குண்டு மழை பொழிந்தார். ஈராக்கில் ஜெபமா  பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? என்று  அமெரிக்காவின் முகமுடியை உலகுக்குக் கிழித்து  காட்டினார்.


பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை குறிப்புகள் சில:

பிறப்பு  : ஆகஸ்ட் 13 , 1926

இயற்பெயர் : பிடல் காஸ்ட்ரோ ரூஸ்

அவரது குடும்பம் செல்வ செழிப்பான குடும்பமாக இருந்தது. அவரது தாத்தா ஒரு சாதாரண வாகன் ஒட்டியாக இருந்தாலும், அவர் தந்தை கடுமையாக உழைத்து ஏராளமான நிலங்களை பெற்றிருந்தார்.

அவர் சிறப்பான  ஆரம்ப கல்வியை கத்தோலிக்கப் பள்ளிகளில்  பயின்றார்

ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே அரசியல் ஊழலுக்கு எதிரான மாணவர் குழுவிலும்  பின்பு மரபு கட்சி (ஆர்த்தடாக்ஸ் பார்ட்டி ) என்று அழைக்கப்பட்ட கியூப மக்கள் கட்சியில் இணைந்தார்

மார்ச் 10, 1952 இல் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி  ஜெனரல் பாடிஸ்டா இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார்.  இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஆயுதம் ஏந்திய புரட்சியை  நடத்த புரட்சிகர அமைப்பை உருவாக்கினார்.

ஜூன் 26,1953 இல் தனது  26வது வயதில் காஸ்ட்ரோ 160 ஆயுதமேந்திய சாண்டியாகோவிலுள்ள  இளம் வீரர்களுடன் மொன்கடா  ராணுவக் காவல்  முகாம் மீது தாக்குதல் தொடுத்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது அதில் அவரும்  மேலும் 20க்கும் மேற்பட்ட போராளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.

மொன்கடா தாக்குதலின் போதும்  அதை ஒட்டியும் 60 போராளிகளுக்கு மேல் பாடிஸ்டா ராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

    சில வருடங்களுக்கு முன்பு தான் தனது சட்டப் படிப்பை முடித்திருந்த காஸ்ட்ரோ  பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது மறுப்பறிக்கையை  தானே தயார் செய்து கொண்டார். நீதிமன்றத்தை அவர் கியூபா  புரட்சிக்கு  ஆதரவாக வாதிடும் களமாக மாற்றி விட்டார். அந்த அறிக்கை பின்பு  “வரலாறு என்னை விடுவிக்கும்” என்று பல்லாயிரகிக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டது

    அவருக்கும் அவர்  தோழர்களுக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகரித்து வந்த மக்கள் பிரச்சாரத்தின் காரணமாக 22 மாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டனர்.

1955 இல்  மே மாதம் விடுதலை செய்யப்பட்ட பிடல், ஜூலை மாதம் மெக்சிகோ பயணமானார். அங்கிருந்தபடியே கியூபா  புரட்சிக்கான  புரட்சிகர படையை துவங்கினார். அங்குதான் அவர் “சே” குவேராவை சந்தித்தார். அங்கே ஒரு கொரில்லா படையை உருவாக்கினார்

1956 , டிசம்பர் 26 அன்று சே குவேராவுடன்  தனது சகோதரர்கள் உள்ளிட்ட 81 சக போராளிகளுடன் “கிராண்மா”என்ற  கப்பல் மூலம் கியூபக் கடற்கரையை அடைந்தார். அடுத்த 2  ஆண்டுகளில் காஸ்ட்ரோ ஜூலை 26 இயக்கத்தின் மத்திய தலைவராக  தொடர்ந்ததுடன் புரட்சி இராணுவத்தையும் வழி நடத்தினார்.

பின் பல்வேறு இன்னல்களுக்கிடையே புரட்சிப் படையை புனரமைத்து   தனது போராட்டத்தை சியரா மேஸ்ட்ரா மலைகளிலிருந்து கியூபா தீவு முழுவதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தினார்

ஜனவரி 1, 1959 அன்று கியூபாவை விட்டு சர்வதிகாரி பாடிஸ்டா ஓடிவிட்டார். காஸ்ட்ரோவின் அறைகூவலை  ஏற்று புரட்சிக்கு ஆதரவாக  பொது வேலை நிறுத்தத்தை மக்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

ஜனவரி 8 1959 அன்று காஸ்ட்ரோ வெற்றிகரமாக கியூபா ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஹவானாவில் நுழைந்தார். பிப்ரவரி 13,  1959 அன்று பிரதம மந்திரியாக அவர் பொறுப்பேற்றார். டிசம்பர்   1979 வரை அந்த பதவியை  வகித்தார். பின் தேசிய  சபையின் ஜனாதிபதியாகவும் , மந்திரி சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். தானாக தன் பதவியை விட்டு அவர் விலகும் வரை அந்த நாட்டின் அதிபராக நீடித்தார்


 பிடல் - சில ருசிகர தகவல்கள்

  
தாம் பைனஸ்  தீவில் சிறைப்பட்டிருந்த போது தனது மனைவி மிர்தா  கணக்கராகப் பணியாற்றினார் என்பதை அறிந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். தன் குழந்தையை காப்பாற்றத்தான் அரசு வேலையில்  சேர்ந்ததாக மனைவியும் அவர் கூறியதையும் அவர் ஏற்கவில்லை. பின்னர் மனைவி வேறொருவரை மணந்து வெளிநாடு சென்று  விட்ட போதிலும் பிடல்  மறுமணம் செய்யவில்லை

   ஒருமுறை பிடலின் மகனுக்கு உடல் நலிவுற்றது. கண்டிப்பாக அறுவை சிகிச்சை தேவை என்ற நிலை வந்தது. மகனை கண்ட பிடல் 5 பிசோவை (கியூப  நாணயம்) ஒருவரிடம் கடன் வாங்கி கொடுத்து விட்டு, ஒரு நட்பு டாக்டரிடம் சிகிச்சை பெறச்சொல்லி விட்டுப் போய்விட்டார் அப்போது அவர் பையில் நூறு பிசோ  இருந்தது.  இது துப்பாக்கிகள்  வாங்க வந்த நன்கொடை ஆதலால் மகனின் மருந்துக்காக செலவிட முடியாது  மறுத்து விட முடியாது என கூறினாராம்

   தான் ஒரு பண்ணையாரின் மகனாக இருந்தும் விவசாயிகளின் துயர வாழ்க்கையை எண்ணி மிகவும் வருந்துவார். அவர் கல்லூரிப் படிப்பின்போது விடுமுறையில் வந்திருந்த தருணத்தில், சிறுநில சொந்தக்காரர்களையும் , விவசாயிகளையும்  திரட்டி யுனைடெட் ஃப்ரூட் சர்க்கரை  ஆலை (அமெரிக்க நிறுவனம்) க்கு எதிராக ஒரு போராட்டத்தை தொடங்கினார். அப்போது தன் தந்தையாரின் கரும்புப் பண்ணையில் முதலில் தீ வைக்குமாறு  யோசனை கூறினார்.  கரும்பு வயல்கள் பற்றி எரிந்தன.  பிடல் அப்போது அகப்படாமல் தப்பி விட்டார். போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் கியூபப் புரட்சி வெற்றி பெற்று நிலச் சீர்திருத்தச்சட்டம் அறிவிக்கப்பட்டபோது அரசு எடுத்துக்கொள்ளும் பண்ணை நிலங்களுக்கு  இழப்பீட்டு தொகை தர ஒப்புக் கொள்ளப்பட்டது. அதில் ஒரே ஒரு விதிவிலக்கை  அறிவித்தார் தன் தந்தைக்கு சொந்தமாயிருந்த 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்திற்கு மட்டும் இழப்பீடு தொகை கிடையாது என அறிவித்து அந்த நிலத்தை பிடலும், சேகுவாராவும் நேரில் சென்று விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்கினர்

  
    புரட்சி வெற்றி பெற்ற போது தன்னை அதிபராக அறிவித்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த தேசபக்தர் உர்சியா  என்பவரை ( இவர்தான் மொன்கடா  இராணுவ முகாம் தாக்குதல் வழக்கில்  நீதிபதியாக இருந்தவர்) அதிபராக அறிவித்தார் ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர், பொருளாதார நிபுணர்கள் இருவர், தனது ஆதரவாளர் இருவர்  ஆகியோரை கொண்ட மந்திரி சபை அறிவித்தார்


  
     பிடலுக்கு சுருட்டு பிடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் அரை கட்டு சுருட்டு பிடித்து வந்த அவர் தம்  மக்களுக்கு முன் மாதிரியாக திகழ அந்த பழக்கத்தை அடியோடு கை விட்டார்

   
    பிடல் ஒரு புரட்சியாளர் மட்டுமில்லை. நல்ல இலக்கிய ரசனை கொண்டவர்.மேலும் அறிவுத்தேடல்  அதிகம் உண்டு. அறிவியல் , மருத்துவம் என எந்தத் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கிடைத்தாலும் உடனே அதை முழுமையாக படித்து விடுவார்.பிடல்  ஒரு மிகச்சிறந்த பேச்சாளர். எங்கே, எப்போது பேசினாலும், தன் திறமையால் அனைவரையும் கவர்ந்து விடுவார். கியூபாவில் அவர் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்றால் அவரை  ரசிக்க மக்கள் ஆங்காங்கே கூடிவிடுவர். நாடே ஸ்தம்பிக்கும்.

      உலகில் அதிக கொலை முயற்சிகளுக்கு தப்பியவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ இவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் மட்டும் 638. உண்ணும் உணவில், குடிக்கும் பானத்தில், பிடிக்கும் சுருட்டில், என பலவகை கொலை முயற்சிகளையும் முறியடித்து உயிரோடு உலா வந்தவர் இந்த புரட்சியாளர்.